சிறைச்சாலைகளுக்குள் ஒரு தனி சாம்ராஜ்யம்: பின்னணியில் யார்..!
நாட்டில் தற்போது, ஜனாதிபதி பொதுமன்னிப்பு என்ற போர்வையில் மேற்கொள்ளப்பட்ட மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி மன்னிப்பு என்ற பெயரில் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினரால் கடந்த 09ஆம் திகதி இரவு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட அவரை இன்று(11) வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கூடுதல் நீதவான் மஞ்சுள ரத்நாயக்க நேற்று (10) உத்தரவிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், கிறிஸ்துமஸ் தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று 68 கைதிகள் இவ்வாறு சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகக் கூறினார்.
பொதுமன்னிப்பு
இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நேற்று பிற்பகல் கொழும்பு கூடுதல் நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் முன்னிலைபடுத்தப்பட்டார்.
அதன்போது, குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பில் முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில், "அரசியல் சட்டத்தின் 34வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரமான ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையின் கீழ், சிறைச்சாலை அதிகாரிகள் தங்கள் சொந்த விருப்பப்படி குற்றவாளிகளை விடுவித்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "சிறைச்சாலை அதிகாரிகள் நீதிபதிகளாக செயல்பட்டுள்ளனர். அபராதம் செலுத்தாததற்காக சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிகளை சிறைச்சாலை கண்காணிப்பாளர்கள் எவ்வாறு வீட்டிற்கு அனுப்ப முடியும்? இது நிறைவேற்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது மட்டுமல்ல, நீதித்துறை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதும் ஆகும்.
முன்னர் நாட்டின் பொலிஸ் மா அதிபர் தனது எதிரியைத் தாக்க தனது அதிகாரிகளை அனுப்பி வழக்குத் தொடர்ந்தார். பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கைதி பட்டியல்
இப்போது நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தும் ஒரு பொறுப்பின் கீழ் உள்ளவர், சட்டவிரோதமாக கைதிகளை விடுவிப்பதை காணக்கூடியதாக உள்ளது. இது நீண்ட காலமாக நடந்து வரும் ஒரு செயல்முறையாகும்.
அவர்கள் இந்த சிறைச்சாலைகளுக்குள் ஒரு சிறிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளனர். குறித்த அதிகாரிகள் முதலாளிகளை போல அரியணையில் உள்ளனர். கிட்டத்தட்ட பாதாள உலக குழுக்களை போலவே, தொடர்புடைய வெசாக் போயா நாளில், ஜனாதிபதி மன்னிப்பு வழங்கக்கூடிய கைதிகள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள 28 சிறைச்சாலைகளில் இருந்து 04 பிரிவுகளின் கீழ் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன.
பிரதிவாதி கூண்டில் நிற்கும் இந்த சிறைச்சாலை ஆணையாளர், அந்த பரிந்துரைகளை நீதி அமைச்சகம் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பியுள்ளார். ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 388 பெயர்களில், அனுராதபுரம் சிறைச்சாலையால் பரிந்துரைக்கப்பட்ட 36 பெயர்களின் பட்டியல் இருந்துள்ளது. ஆனால் விடுவிக்கப்பட்ட குறித்த கைதியின் பெயர் இவற்றில் எதிலும் இல்லை.
2024ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸின் போது ஜனாதிபதி மன்னிப்புக்கு அங்கீகரிக்கப்படாத 57 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2025 சுதந்திர தினத்தன்று பொது மன்னிப்புக்கு அங்கீகரிக்கப்படாத 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்
இவை அனைத்தும் நீதிபதிகளின் உத்தரவின் பேரில் நடக்கவில்லை. நான் குறிப்பிட்ட சிறைச்சாலை ஆணையாளர், அதாவது குறித்த சாம்ராஜ்ஜியத்தின் மன்னரின் உத்தரவின் பேரில், 2.5 மற்றும் 2 மில்லியன் ரூபாய் அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் இந்த சிறைச்சாலையின் பதிவுகளில் இரகசியமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நாங்கள் இப்போது சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் அனைத்து சிறைக் கண்காணிப்பாளர்களிடமும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளோம். அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அனைவரின் சொத்துக்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர், சந்தேக நபரான துஷார உப்புல்தெனியவை மீண்டும் காவலில் வைக்குமாறு நீதிமன்றத்தைக் கோரியுள்ளார். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதிப்பதை தாம் ஏற்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய சார்பில் சட்டத்தரணி தர்ஷன குருப்பு பிணை கோரி விண்ணப்பித்துடன், "துஷார உபுல்தெனிய ஜனாதிபதி செயலகத்தின் சுற்றறிக்கையின்படி செயல்பட்டுள்ளார்.
முக்கிய சந்தேகநபர்கள்
வெசாக் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர்கள் முன்கூட்டியே அனுப்பப்படும். பெயர் பட்டியல் அனுப்பப்பட்ட பிறகு, அதே காலகட்டத்தில் மற்றொரு குழுவினர் மன்னிப்பு பெற தகுதியுடையவர்கள் என அடையாளப்படுத்தப்படுவர்.
தொடர்புடைய சுற்றறிக்கையின்படி, தகுதியுள்ளவர்களின் பெயர்களை பின்னர் நீதி அமைச்சகத்திற்கு அனுப்ப சிறைச்சாலை அதிகாரிகள் உரிமை பெற்றுள்ளனர். இவ்வாறு அனுப்பப்படும் பெயர்கள் ஆரம்பத்தில் அனுப்பப்படும் பட்டியலில் சேர்க்கப்படாது.
தவறான நபர் விடுவிக்கப்பட்டிருந்தால், நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோரையும் இந்த வழக்கில் சந்தேக நபர்களாகக் குறிப்பிட வேண்டும்.
மேலும், இந்த விடுதலை அனுராதபுரம் சிறைச்சாலையால் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அந்த சிறைச்சாலை கண்காணிப்பாளர் அதற்குப் பொறுப்பு. இருப்பினும், துஷார உபுல்தெனிய அதை ஆதரித்ததாக எந்த ஆதாரமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை தொடர்ந்து பரிசீலித்த மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க, கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டதுடன், சந்தேகநபர் துஷார உபுல் தெனியவை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
உண்மைத்தன்மை
அதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட டபிள்யூ.எம். அதுல திலகரத்ன, தற்போது தனது வசிப்பிடப் பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, குறித்த நபரைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேபோல், கடந்த காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளில் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் தகுதியற்ற சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான ஒரு பின்னணியில் தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்த விடயம் தொடர்பில், விசாரணைகளை நடத்தி உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரி வருகின்றனர்.
அந்தவகையில், ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவோரின் பட்டியலில் தகுதியற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றமைக்குப் பின்னணியில் சிறைச்சாலை ஆணையாளர் மாத்திரமன்றி, பின்னணியில் பலரும் இருக்கக்கூடும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், தனது முகப்புத்தக பதிவொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அது மாத்திரமன்றி, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, விசாரணை, குற்றப் பத்திரிகை, வழக்கு, சிறைத் தண்டனை என்ற பாதையில் பயணிக்க வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கடுமையாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு என்பது, நாட்டின் குற்றச்செயல்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகளை குறைக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் ஒரு நல்லெண்ண அடிப்படையிலான விடயமாகும்.
இந்நிலையில், இந்த நடவடிக்கையிலேயே அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
எனவே, இது குறித்து நீதித்துறையில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
