ஜனாதிபதி மன்னிப்பை பயன்படுத்தி விடுவிக்கப்பட்ட மேலும் 68 கைதிகள்
ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில், சட்டவிரோதமாக கைதிகள் விடுவிக்கப்பட்ட பல சம்பவங்கள் தெரியவந்துள்ளதாக, மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் இன்று(10.06.2025) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2024 கிறிஸ்மஸின் போது 57 கைதிகளும், 2025 சுதந்திர தினத்தின் போது மேலும் 11 கைதிகளும் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் தவறாக விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார நிஷாந்த உபுல்தேனிய, கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, பீரிஸ் இந்த சமர்ப்பணங்களை வழங்கியுள்ளார்.
சட்டவிரோத மன்னிப்பு
சில கைதிகள் ஜனாதிபதி மன்னிப்பை பெறுவதற்காக, போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் உபுல்தெனியவின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வெசாக் போயாவின் போது, நாடு முழுவதும் 29 சிறைகளில் இருந்து 338 கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், அவர்களில் குறைந்தது இரண்டு பேர் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2025, ஜூன் 6 அன்று ஜனாதிபதியின் சிரேஷ்ட செயலாளர் எழுத்துப்பூர்வமாக அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் துறை தனது விசாரணையை ஆரம்பித்தது.
இதன்படி, அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதுல திலகரத்ன என்ற கைதி சட்டவிரோதமாக மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது.
அதே சிறையில் இருந்து மற்றொரு கைதியும் இதேபோன்ற ஒழுங்கற்ற வழிகளில் விடுவிக்கப்பட்டமை கண்டறியப்பட்டதாக மேலதிக மன்றாடியார் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |