அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கு: பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரின் உறவினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்த கவனவீர்ப்புப் போராட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
பொதுமன்னிப்பு வழங்குமாறு உறவினர்கள் வேண்டுகோள்
தமது குடும்பங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள "பாரிய அநீதிகள்" குறித்து ஜனாதிபதி தலையிட வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் மனு ஒன்றையும் கையளித்தனர்.

போராட்டக்காரர்களில் ஒரு குழுவினர் பின்னர் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருடன் கலந்துரையாடலில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.
நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும், அதேவேளை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி இந்த வழக்கை மீண்டும் ஒருமுறை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தண்டனை பெற்றவர்களில் ஒருவரின் மனைவி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், "எனது கணவர் மட்டுமே எங்கள் குடும்பத்தின் ஒரே வருமான ஈட்டுபவர். ஐந்து குழந்தைகள் மற்றும் வயதான உறவினர்களை அவரே கவனித்து வந்தார். அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து நாங்கள் வாடகை வீட்டில் சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம்." - என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
இறுதி தீர்ப்பு
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை எனத் தொடர்ந்து கூறி வந்ததாக அவரது உறவினர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்க்காப்பாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 12 பேருக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
இந்தத் தீர்ப்பானது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மனிதாபிமான அடிப்படையில் தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கோரி வருகின்றனர்.
தமது அன்புக்குரியவர்களைக் காப்பாற்றுவதற்காக சட்ட ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் போராட்டங்களைத் தொடரப் போவதாக அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.