சம்மாந்துறையில் நடைபாதை வியாபாரிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு
அம்பாறை - சம்மாந்துறை வீதியோரங்களில் உரிய அனுமதியின்றி பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறான நடைபாதை வியாபாரிகளை அகற்றும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் குறித்த முன்னெடுப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம்
அண்மையில் ஏற்பட்ட விபத்துக்கள் மக்கள் முறைப்பாடுகள் தொடர்பில் பிரதேச சபை நகரின் அழகினை மெருகூட்டுவதற்காகவும் விசாலமான வீதி ஊடாக பாதுகாப்பான போக்குவரத்து வசதியினை மேற்கொள்ளும் வகையிலும் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது சம்மாந்துறை பிரதேச சபையினர், பொலிஸார், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இணைந்து இந்த செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் சம்மாந்துறை நகரின் வீதியோரங்களில் உரிய அனுமதியின்றி இயங்கி வந்த நடைபாதை வியாபாரிகள் அகற்றப்பட்டதுடன் ஏனையோரை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
பாதசாரிகளின் பாதுகாப்பு
இந்த செயற்திட்டம் ஊடாக நகரின் நெரிசலைக் குறைக்கவும் பொதுமக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை அவசியமானதொன்றாக அமைந்துள்ளது.

மேலும், முறையான திட்டமிடல் மற்றும் கூட்டுப் பொறுப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்தச் செயற்பாடு சம்மாந்துறை நகரை இன்னும் நேர்த்தியானதும் ஒழுக்கமானதும் மற்றும் பாதுகாப்பான ஒரு வணிக மையமாக மாற்ற வழிவகுக்கும் என பொதுமக்கள் உரிய அதிகாரிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பொதுமக்களின் ஒத்துழைப்பு தான் நகரின் முன்னேற்றத்திற்கான அடிப்படையாகும்.எனவே அழகான சம்மாந்துறை நகரை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என உரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.