இலங்கையில் TIN இலக்கம் கட்டாயம்! இனிமேல் இரகசியத் தகவலாக கருதப்பட மாட்டாது என அறிவிப்பு
புதிய சட்டத் திருத்தத்தின் கீழ், வரி செலுத்துவோர் அடையாள இலக்கங்கள் (TIN) இனிமேல் இரகசியத் தகவலாக கருதப்பட மாட்டாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட சுமார் 4 இலட்சம் பேர் இதுவரை வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) பெற்றுக்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
'TIN' இலக்கம் வழங்கல்
இது தொடர்பான அறிவிப்பில் மேலும், நாட்டில் இதுவரை 13 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு 'TIN' இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போதைய சட்ட விதிகளின்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்துக் குடிமக்களும் இந்த அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஒட்டுமொத்தமாக சுமார் 17 மில்லியன் மக்கள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுப் பரிவர்த்தனை
2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ், பல்வேறு முக்கிய பொதுப் பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் வருடாந்தம் புதுப்பித்தல், புதிய வணிகங்களைப் பதிவு செய்தல், நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல், கடன் அட்டைகளைப் (Credit Cards) பெற்றுக்கொள்ளுதல் ஆகிய தேவைகளுக்கு 'TIN' இலக்கத்தைச் சமர்ப்பிப்பது அவசியமாகும் என சுட்டிக்காட்டியுள்ளது.