தேயிலை மலைக்குள் சிக்கிய சிறுத்தைப்புலி (Video)
பொகவந்தலாவை பிரதேசத்தில் தேயிலை மலைக்குள் சிக்கிய சிறுத்தைப்புலி ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை – செப்பல்ட்டன் தோட்டத்தின் மேற்பிரிவில், மூன்று அடி நீளமான ஆண் சிறுத்தைபுலி ஒன்று தேயிலை மலைக்குள் சிக்கிய நிலையில் தப்பிக்க முடியாமல் சுமார் 8 மணிநேரம் தவித்துள்ளது.
தேயிலை மலைப்பகுதி
குறித்த சிறுத்தைப்புலி சிக்கியிருப்பதை அறிந்த தோட்ட தொழிலாளர்கள் அது தொடர்பில் நேற்று (12.10.2022) காலை தோட்ட அதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
மரக்கறி தோட்டமொன்றில், மிருகங்களிடமிருந்து விளைச்சலை பாதுகாக்கும் நோக்கில் போடப்பட்டிருந்த கம்பி வலையிலேயே குறித்த சிறுத்தைப்புலி சிக்கியுள்ளது என்றும், மக்கள் நடமாட்டத்தை கண்டதும் வலையை பிய்த்துக்கொண்டு தேயிலை மலைப்பகுதிக்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போதே குறித்த சிறுத்தைப்புலி தேயிலை மலைப்பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளது.
சிறுத்தைப்புலி மீட்பு
பின்னர், ரந்தெனிகல மிருக வைத்தியசாலையிலிருந்து, மிருக வைத்திய அதிகாரியொருவர் வரழைக்கப்பட்டு, துப்பாக்கி மூலம் மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டு, சிறுத்தைப்புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
சிகிச்சைகளுக்காக மினிப்பே மிருக வைத்தியசாலைக்கு சிறுத்தைப்புலி கொண்டு
செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுத்தைப்புலி குணமடைந்த பின்னர் சரணாலயத்தில் விடுவிக்கப்படும் என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.



