வீட்டில் சிக்கிய சிறுத்தைப்புலி் பாதுகாப்பாக மீட்பு (VIDEO)
கொட்டகலை, திம்புளை பிரதேசத்தில் வீடொன்றில் சிக்கிய சிறுத்தைப்புலி, பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தைப்புலி
கொட்டகலை – திம்புளை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தின் வட்டக்கான் பிரிவில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று இன்று காலை சிக்கியுள்ளது.
இதனை கண்ட குறித்த வீட்டில் இருந்தவர்களும், பிரதேசவாசிகளும் திம்புளை, பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
ரந்தெனிகல மிருக வைத்தியசாலையின் அதிகாரிகள் குழுவொன்றும், நுவரெலியா வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த கூட்டு நடவடிக்கை வெற்றிகரமாக முடியும் வரை பிரதேசத்திற்கு தேவையான பாதுகாப்பை திம்புளை - பத்தனை பொலிஸார் வழங்கியுள்ளனர்.
வேட்டையாட சென்ற புலி
சுமார் 4 அடி நீளமான ஒரு வயதான இந்த ஆண் சிறுத்தைப்புலி நாயொன்றை வேட்டையாட வந்தவேளை வீட்டின் பின்பகுதியில் உள்ள அறைக்குள் விழுந்து அதற்குள் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்டுள்ள சிறுத்தைப்புலி ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதன் உடல் நிலை பரிசோதிக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள்
பாதுகாப்பான வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.