நாம் ஊழலற்ற தூய்மையான ஆட்சியை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளோம்! பிரதி அமைச்சர் சுனில் வட்டகல
தேசிய மக்கள் அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை உறுதிசெய்து ஊழலற்ற ஆட்சியை கடந்த 2 வருட காலத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது. அத்துடன் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது எவரும் விரல் சுட்டிக் குற்றம் சுமத்த முடியாத அளவுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தற்போதைய அரசு அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைவாக, ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்பை முழுமையாக உறுதிசெய்து ஊழலற்ற தூய்மையான ஆட்சியை கடந்த 2 வருட காலத்தில் நிலைநிறுத்தியுள்ளது.
மக்கள் ஆட்சி
கடந்த கால ஆட்சி முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, நாட்டின் சாதாரண மக்களையும் நிர்வாகக் கட்டமைப்போடு நேரடியாக இணைக்கும் வகையில் மக்கள் பங்கேற்புடனான ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
பொதுமக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வுகளை வழங்குவதற்காக அரசியல் தலைமைத்துவம் நேரடியாகவே மக்களிடம் செல்லும் புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, ஜனாதிபதி நேரடியாகப் புலத்சிங்கள, பேருவளை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து மக்களின் நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளார்.
இதேபோன்று, ஜனாதிபதி மாவட்ட மட்டத்திலும், அமைச்சர்கள் தொகுதி மட்டத்திலும், நகர சபைத் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் வரையிலும் நேரடியாகச் சென்று மக்களையும் அரச அதிகாரிகளையும் சந்தித்துப் பணியாற்றி வருகின்றனர்.
இது ஒரு சங்கிலித் தொடர் போன்ற கட்டமைக்கப்பட்ட அமைப்பாகச் செயற்பட்டு வருகின்றது. கடந்த ஆட்சிக் காலங்களில் கொடிகட்டிப் பறந்த ஊழல், இலஞ்சம் மற்றும் நிர்வாக முறைகேடுகளை முழுமையாக ஒழிக்கவே இந்த அரசை மக்கள் தோற்றுவித்ததன் முதன்மை நோக்கமாகும்.

அந்த மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில், தற்போதுள்ள 159 நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளோ எவ்வித ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.
மக்கள் பிரதிநிதிகள் மீது எவரும் விரல் சுட்டிக் குற்றம் சுமத்த முடியாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரசியல்வாதிகள் எவரும் இனி ஊழல் சார்ந்த செயல்களுக்கு அரச அதிகாரிகளையோ அல்லது பொதுமக்களையோ தூண்டப்போவதில்லை.
இதனால் அரச அதிகாரிகள் எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் அஞ்சாமல், சுதந்திரமாகவும் தைரியமாகவும் நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்ற முடியும். மக்கள் பிரதிநிதிகளும் அரச அதிகாரிகளும் கைகோர்த்து நாட்டுக்காகப் பணியாற்றுவதற்கு இதுவொரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.