இலங்கைக் கடற்படையினரின் விசேட தேடுதல் நடவடிக்கை! எட்டு இந்திய கடற்றொழிலாளர்கள் கைது
இலங்கைக் கடற்படையினர், இன்று அதிகாலை மன்னாருக்கு வடக்கே இலங்கைக் கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 8 இந்திய கடற்றொழிலாளர்களை இந்திய மீன்பிடிப் படகு ஒன்றுடன் கைது செய்துள்ளனர்.
நாட்டின் கடற்பரப்பை மீறி வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
சட்டவிரோத மீன்பிடி
அதன்படி, இன்று வடமத்திய கடற்படை கட்டளை மன்னாருக்கு வடக்கே இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் பலவற்றை அவதானித்ததோடு, அந்த மீன்பிடிப் படகுகளை இலங்கையில் இருந்து அகற்றும் விசேட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
அங்கு இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீன்பிடிப் படகு ஒன்று இலங்கைக் கடற்படையினரால் முறையாகச் சோதனை செய்யப்பட்டதுடன், எல்லை விதிகளை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 8 இந்திய கடற்றொழிலாளர்களை அந்த மீன்பிடி படகுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரிடம் சிக்கிய இந்திய மீன்பிடி படகும், அதில் இருந்த 8 இந்திய மீனவர்களும் தலைமன்னார் இறங்குத்துறைக்குக் கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



