மதுபோதையில் வாகனங்களைச் செலுத்திய 358 சாரதிகள் கைது
மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 358 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கைது
இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 20 பேரும், சந்தேகத்தின் பேரில் 627 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 227 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 137 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 31 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4 ஆயிரத்து 571 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.