டித்வா சூறாவளியால் அவதிப்படும் 25 குடும்பங்கள் - ஜனாதிபதி அவசர நடவடிக்கை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட கவனத்திற்கு உட்பட்டுள்ள கொத்மலை வெவண்டன் தோட்டத்தில் டித்வா சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட 25 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் கடந்த ஆறு மாதங்களாக தற்காலிக கூடாரங்களில் கடும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயத்தால் தங்களது வீடுகளை இழந்த இந்த குடும்பங்கள் ஆரம்பத்தில் பொதுமக்கள் தங்கும் இடங்களிலும் தோட்டக் கோவிலிலும் தங்கியிருந்த நிலையில், பின்னர் அரசாங்கம் ஏற்பாடு செய்த தற்காலிக கூடாரங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
25 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு
எனினும், மழைக்காலம் மற்றும் பலத்த காற்று வீசும் நாட்களில் அந்த கூடாரங்களில் தங்கியிருப்பது மிகவும் கடினமானதாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்து வழங்கவோ அல்லது பாதுகாப்பான இடமொன்றில் மீளக் குடியமர்த்தவோ அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த குடும்பங்களுக்காக அதே தோட்டப்பகுதியில் வீடுகள் அமைப்பதற்கான நிலத்தை ஆய்வு செய்ய தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரிகள் சென்றிருந்த போதிலும், அந்த நிலப்பகுதியும் மண்சரிவு அபாயம் கொண்டதாக அடையாளம் காணப்பட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டித்வா சூறாவளிக்குப் பின்னர் மண்சரிவு அபாயம் காரணமாக வெவண்டன் தமிழ் மகா வித்தியாலயம் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
அத்துடன், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தற்போது கொத்மலை தொண்டமான் கலாசார மண்டபத்தில் தற்காலிகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
தங்களது தோட்டப் பகுதியில் புதிய பாடசாலை ஒன்றையும் அமைத்து தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, (13) ஆம் திகதி நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கொத்மலை பிரதேச செயலாளர் நதீர லக்மால் அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

இதன்போது, அந்தப் பகுதி கடும் மண்சரிவு அபாயம் கொண்டிருப்பதால் அங்கு நிரந்தர வீடுகள் அமைப்பது சாத்தியமற்றது என பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பொருத்தமான காணி ஒன்றை அடையாளம் கண்டு, நிரந்தர வீடுகள் அமைக்கப்படும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக வீடுகள் உடனடியாக அமைத்து வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் கொத்மலை பிரதேச செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத்தயாராக இருக்கவும்..! பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam