பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் - 20 பேரை அதிரடியாக கைது செய்ய நடவடிக்கை
அடுத்து வரும் வாரங்களில் தென்னிலங்கை அரசியல் பெரும் பரபரப்பான நிலையில் இருக்கும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல்வேறு பதவிகளில் இருந்த 20 அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்பட உள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலஞ்சம், ஊழல் மற்றும் சட்டவிரோத சொத்து குவிப்பு சம்பவங்கள் தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மீதான விசாரணைகள் தற்போது விரைவாக நடத்தப்பட்டு வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர்பில் பல அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஆணையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல அரசியல்வாதிகள் எதிர்வரும் நாட்களில் ஆணையத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கண்காணிப்பு நடவடிக்கை
இதற்கிடையில், ஊழல் மற்றும் சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தியுள்ளதாகவும், இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முடிந்தவுடன் கைதுகள் செய்யப்படும் எனவும் ஆணைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பல நிறுவனங்களின் அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் ஒன்றிணைந்து இலஞ்சம் வாங்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இது தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல, மகிந்தானந்த அழுத்கமகே, எஸ்.எம்.சந்திரரேன, நளின் பெர்னாண்டோ, சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பல அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
