மகிந்தானந்தவின் வழக்கு கடந்து வந்த பாதை...
2015ம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக விளையாட்டு அமைச்சின் 39,061,290 ரூபா நிதியைச் செலவிட்டு, லங்கா சதொச ஊடாக 14 ஆயிரம் கரம் மற்றும் 11 ஆயிரம் தாம் விளையாட்டுப் பலகைகளை இறக்குமதி செய்து அரசியல் ஆதரவாளர்களுக்கு விநியோகம் செய்திருந்தார்.
பியகமையில் இருந்த தேர்தல் அலுவலகம் ஒன்றில் இருந்து விநியோகிக்கப்படாமல் எஞ்சியிருந்த சில விளையாட்டு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்திருந்தது.
அதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் அதன் பின் வந்த நல்லாட்சிக் காலத்தில் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு (FCID) மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு,கடந்த 2015ம் ஆண்டு BC/2399/15 முதல் தகவல் அறிக்கையின் மூலம் இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
அன்றைய கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க முன்னிலையில் இந்த விடயம் தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டது.
மகிந்தானந்த அளுத்கமகே
ஆரம்பத்தில் மகிந்தானந்த அளுத்கமகே, விளையாட்டு அமைச்சின் களஞ்சியப் பொறுப்பாளர் அஜித் பிரசன்ன ஆகியோர் மட்டுமே சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.
பின்னர் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 19ம் திகதி பிரதி சொலசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி, நீதிமன்றத்தில் முன்னிலையாகி இந்த வழக்கை மீள பெறுவதாக அறிவித்திருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவருக்கு மேலதிகமாக சதொச நிறுவனத்தின் தலைவராக இருந்த நளின் பெர்னாண்டோவும் சந்தேக நபராக பெயரிடப்பட இருப்பதாகவும், குறித்த சந்தேக நபர்கள் மூவருக்கும் எதிராக விரைவில் புதிய வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார்.
அதனையடுத்து மகிந்தானந்த மற்றும் அஜித் பிரசன்னவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டிருந்தது.
நீண்ட விசாரணைகளின் பின்னர் மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட அமர்வின் (ட்ரையல் அட் பார்) முன்பாக HCPTB 02/02/19 இலக்கத்தின் கீழ் கடந்த 2019ம் ஆண்டின் 06ம் மாதம் 27ம் திகதி மகிந்தானந்த அளுத்கமகே, சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ, விளையாட்டு அமைச்சின் களஞ்சியப் பொறுப்பாளர் அஜித் பிரசன்ன ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
ஆர்.குருசிங்க, சஷி மகேந்திரன், அமல் ரணராஜா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதியரசர்கள் குழாம் சந்தேக நபர்களை தலா ஒருலட்சம் ரூபா மற்றும் பத்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல உத்தரவிட்டது.
வழக்கு விசாரணை
அதன் பின் கோட்டாபய ஆட்சிக் காலத்தில் வழக்கு அப்படியே கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. 2022ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆனவுடன் வழக்கு மீண்டும் தூசுதட்டப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2024ம் வருடம் ஜூலை மாதம் 09ம் திகதி குறித்த வழக்கு விசாரணையின் போது, வழக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கும் நிலைக்கு வந்திருந்தது.
வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதை உணர்ந்து கொண்ட மகிந்தானந்த தரப்பு வழக்கறிஞர்கள், தொழில்நுட்ப காரணிகளை முன்வைத்து வழக்கை தள்ளுபடி செய்யுமாறு ஆட்சேபனை தெரிவித்தனர்.
வழக்குத் தொடுக்கப்பட்ட விதம் பிழையானது என்றும் எனவே பிரதிவாதி தரப்பு சாட்சிகளை விசாரிக்காமலேயே வழக்கைத்தள்ளுபடி செய்யுமாறும்,தங்கள் கட்சிக்காரர்களை குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து விடுதலை செய்யுமாறும் மகிந்தானந்த தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
பிரதிவாதிகள் தரப்பு கோரிக்கை தொடர்பில் உடனடியாக பதில் வழங்குவதாகத் தெரிவித்த ட்ரையல் அட் பார் நீதிபதிகள் அமல் ரணராஜா (தலைவர்) மகேஷ் வீரமன், பிரதீப் ஹெட்டியாரச்சி ஆகியோர் வழக்கை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைத்தனர்.
எனினும் அதே ஜூலை 11ம் திகதி மகிந்தானந்த தரப்பு கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் வழக்கை முன்கொண்டு செல்வதாக தீர்ப்பளித்தது. அதன் பின்னர் எந்தவொரு வழக்குத் தவணையிலும் மகிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
தேர்தல் பணிகளை காரணம் சாட்டி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கடந்த ஏப்ரல் 23ம் திகதி இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
அதன் போது ட்ரையல் அட்பார் அமர்வின் முன்பாக விசாரிக்கப்படும் வழக்கின் தற்போதைய நிலை குறித்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சரியான தகவல்களை அறிந்திருக்கவில்லை.
சட்டமா அதிபரின் ஆலோசனை
அதே நேரம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற எதிர்வரும் ஒக்டோபர் 29ம் திகதி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ட்ரையல் அட் பார் (மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு) இன்றைய தினம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதன் மூலம் மகிந்தானவுக்கு இருபது வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும், நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 7 மணி நேரம் முன்

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம் News Lankasri

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam
