மின்சார உபகரண பயன்பாட்டில் அவதானமாக இருக்கவும்! 31 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்
அனுராதபுரம், அசரிக்கம பகுதியில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றும் 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கம்
நேற்று அப்பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலையின் போது, மேற்படி இளைஞர் தனது கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போதே எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியுள்ளது. மின்னல் தாக்கத்துக்குள்ளான அவர் உடனடியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்
உயிரிழந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பரசன்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சீரற்ற காலநிலையின் போது மின்சார உபகரணங்கள் மற்றும் தொலைபேசி பயன்பாட்டில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.