இளம் பெண்களுக்கு தாதியர் சேவையில் இணைவதற்கான ஆர்வம் குறைவு: வடக்கு ஆளுநர் தெரிவிப்பு
வடக்கு மாகாணத்துடன் தொடர்புடைய இளம் பெண்கள் தாதியர் சேவையில் இணைவதற்கான ஆர்வம் சில ஆண்டுகளாகக் குறைந்து வருவதால், ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த தாதியர்கள் வடக்கு மாகாண மருத்துவ மனைகளில் பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டப் பொது மருத்துவ மனையில் தாதியர் உத்தியோகத்தர்களுக்கான விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (17.09) நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தாதியர் உத்தியோகத்தர்களின் பணிச்சூழல் அவர்களின் சேவைத் தரத்திலும் நேரடியாக தாக்கம் செலுத்தக் கூடியது.
கோரிக்கை
வடக்கு மாகாணத்துடன் தொடர்புடைய இளம் பெண்கள் தாதியர் சேவையில் இணைவதற்கான ஆர்வம் சில ஆண்டுகளாகக் குறைந்து வருவதால், ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த தாதியர்கள் வடக்கு மாகாண மருத்துவ மனைகளில் பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
தமது சொந்த பிரதேசங்களிலிருந்து தொலைதூரம் வந்து சேவையாற்றும் அவர்களுக்கு தேவையான தங்குமிட மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மாகாணத்தின் பொறுப்பு.

மேலும், புதிய தாதியர் நியமனங்களுடன் சிலர் இடமாற்றம் பெற்று வெளியேறுவதால் மொத்த மனிதவளத்தில் எதிர்பார்க்கப்படும் அளவிலான அதிகரிப்பு ஏற்படாத நிலையும் காணப்படுகிறது.
வடக்கு மாகாணத்தின் உண்மையான தேவையை அடிப்படையாகக் கொண்டு தாதியர் நியமனங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்துமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் எனத் தெரிவித்தார்.