கொழும்பில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய தம்பதி - பொலிஸ் விசாரணையில் அம்பலமான ரகசியம்
கொழும்பின் புறநகர் பகுதியாக கஸ்கிஸ்ஸ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பெருந்தொகை பணத்துடன் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளது.
பாணந்துறை குடு சலிந்து என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் சலிந்து மல்ஷித குணரத்னவின் பணத்திற்கு பொறுப்பாளராக செயல்பட்ட தம்பதியே நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, இரத்மலானை விமான நிலையச் சந்திப்புக்கு அருகில் ஹெராயின் விநியோகம் மற்றும் பண வசூலில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பணத்துடன் சிக்கிய தம்பதி
இவர்களிடமிருந்து 6.3 மில்லியன் ரூபாய் பணம், 15,055 மில்லிகிராம் ஹெராயின், நவீன பண எண்ணும் இயந்திரம், மின்னணு தராசு மற்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

போதைப்பொருட்களை முச்சக்கர வண்டியில் கொண்டு செல்வதற்காக ஒருவர் வருவதாக கல்கிஸ்ஸ தலைமையகத்தின் பொலிஸ் பரிசோதகர் சுமேத விமல குணரத்னவுக்கு இரகசியத் தகவல் கிடைத்திருந்தது.
இந்த தகவலின் அடிப்படையில், விமான நிலைய சந்திப்பிலிருந்து காலி வீதியை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றை பொலிஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
இதன்போது வாகனத்தின் பின்பகுதியில் பெண் அமர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
முச்சக்கர வண்டி ஓட்டுநரின் சாரதி அனுமதிப் பத்திரத்தைச் சோதித்ததில், அவர் பாணந்துறை அலுபோமுல்ல பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
மேலதிக விசாரணையின் போது சந்தேகநபர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்டதால் அவரை சோதனையிட்டதில், அவரிடமிருந்து ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெருந்தொகையான பணம்
அதனைத் தொடர்ந்து, வாகனத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த பெண்ணிடம் இருந்த சுப்பர் மார்க்கெட் பைக்குள் பெருந்தொகையான பணம் இருப்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.

விசாரணையில், இவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பதும், பாணந்துறை குடு சலிந்து என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்காக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பண வசூல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இந்த பணிகளுக்காக சலிந்து தங்களுக்கு மாதந்தோறும் 150,000 ரூபாய் சம்பளம் வழங்கியதாக சந்தேகநபர்கள் தெரிவித்தனர்.
இந்த தம்பதியினர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிலியந்தலையின் பகுதியில் உள்ள வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்திருந்தனர்.
அந்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, பணத்தைக் கையாள்வதற்குப் பயன்படுத்தப்பட்ட நவீன பண எண்ணும் இயந்திரம் மற்றும் மின்னணு தராசு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ், 26 மற்றும் 34 வயதுடைய தம்பதியினரிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.