கொழும்பில் காதலனால் இளம் பெண் கழுத்தறுத்து கொலை - பொலிஸார் வெளியிட்டுள்ள காரணம்
தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு, கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 25 வயதுடைய யுவதி ஒருவர், அவரது காதலனால் தொழிற்சாலை வளாகத்தினுள்ளேயே கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
பொலிஸார் தீவிர விசாரணை
சம்பவம் தொடர்பில் கடந்த 5 நாட்களாகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதீத சந்தேகத்தின் காரணமாகவே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளதாகவும், எனினும், மேற்படி யுவதியைப் படுகொலை செய்த காதலன் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹொரணை - புளத்சிங்கள வீதி, கோவின்ன நாரகல பிரதேசத்தைச் சேர்ந்த எல்.ஆர். கிம்ஹானி பெரேரா (வயது 25) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4ஆம் திகதி காலை வழக்கம் போல் பணிக்குச் சென்ற கிம்ஹானி, தொழிற்சாலையின் பிரதான வாயிலூடாக நுழைந்து தனது பையை வைக்கும் இடத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே மறைந்திருந்த அவரது காதலன், மறைத்து வைத்திருந்த கத்தியால் கிம்ஹானியைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
ஈரானின் வான்வழி தாக்குதல்களால் மீண்டும் உச்சக்கட்ட பதற்றம்! நடுவானில் சுட்டு வீழ்த்தப்படும் ட்ரோன்கள்
காதல் தொடர்பு
உயர்தரக் கல்வியை முடித்த பின்னர் ஆடைத் தொழிற்சாலையில் இணைந்த கிம்ஹானிக்கும், அங்கு பணிபுரிந்த பதுளை - கெப்பட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக காதல் தொடர்பு இருந்துள்ளது.

குறித்த இளைஞர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், பின்னர் விவாகரத்து பெற்றவர் என்பதும் கிம்ஹானியின் வீட்டாருக்குத் தெரிந்திருந்தது. சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு கிம்ஹானியின் பாட்டி காலமானதால், அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.
இதனால் வீட்டில் இருக்கும் நேரங்களில் காதலனுடன் தொலைபேசியில் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.
"வேலையிடத்தில் நாம் 8 மணிநேரம் ஒன்றாகவே இருக்கிறோம், வீட்டில் இருக்கும் நேரத்தில் எனது பாட்டியின் நினைவுகளுடன் இருக்க அனுமதி கொடு" என்று கிம்ஹானி தனது காதலனிடம் கோரியிருந்தார் என்று உயிரிழந்தவரின் பெரியம்மா தெரிவித்துள்ளார்.
கொலைக்கான காரணம்
இருப்பினும், காதலி தன்னைத் தவிர்க்கின்றார் என்ற அதீத சந்தேகத்தின் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
5 வயதிலேயே தந்தையை இழந்த கிம்ஹானியை, அவரது தாய் நதீகா (வயது 46) பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்த்தெடுத்துள்ளார்.
நிர்வாகத் திறமைக்காக விரைவில் பதவி உயர்வு பெறவிருந்த நிலையிலேயே கிம்ஹானிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அவரது இறுதிச் சடங்குகள் கடந்த 6ஆம் திகதி வேதகேவத்த பொது மயானத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றன.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்யப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.