ஈரானில் பெண்களுக்கு எதிராக உள்ள கடுமையான கட்டுப்பாடுகள்: தீவிரமடையும் ஹிஜாப் எதிர்ப்பு புரட்சி
ஹிஜாப் சரியாக அணியாததால் பொலிஸார் தாக்கியதில் இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் 12 நாட்களாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் உள்ளிட்டோர் மீது பொலிஸார், பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள், அந்நாட்டின் 80 நகரங்களுக்குப் பரவியுள்ள நிலையில், கடுமையாக போராட்ட நடவடிக்கைகளை கையாள அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் இப்ராகிம் ரைசி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் இன்று பதின்மூன்று பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதலானது, சமீபத்திய "கலவரங்களுக்கு" ஆதரவளித்த "பிரிவினைவாத பயங்கரவாதிகளை" தாக்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படை தெரிவித்துள்ளது.
76பேர் பலி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
மேலும், ஈரான் மனித உரிமைகள் அமைப்பானது நாடளாவிய ரீதியில் 76பேர் போராட்டங்களினால் உயிரிழந்துள்ளதாகவும் 1000த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அரசாங்க சார்பு போராளிகள் உட்பட 41 பேர் இறந்ததாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த மாஷா அமினி
குர்திஸ்தானை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) குடும்பத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதன்போது ஈரானில் பொதுவெளியில் பெண்கள் ஹிஜாப் அணிவதை கண்காணிக்கும் வகையிலான நீதிநெறியை கடைப்பிடிக்க செய்யும் கலாச்சார பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தெஹ்ரான் செல்லும் வழியில் மாஷா அமினி மற்றும் குடும்பத்தினரை கலாச்சார பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது சரியாக ஹிஜாப் அணியாததால் மாஷா அமினியை கடந்த (13.09.2022) கைது செய்த பொலிஸார் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் அவரை கைது செய்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றதுடன், அங்கு வைத்தும் பொலிஸார் அவரை தலையில் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மயங்கியுள்ளார்.
இதனால் பொலிஸார் நோயாளர் காவு வண்டி மூலம் மாஷா அமினியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது அவர் கோமா நிலைக்கு சென்றது தெரியவந்தது.
மேலும் தொடர்ந்து அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் மாஷா அமினி சிகிச்சை பலனின்றி கடந்த (17.09.2022) உயிரிழந்துள்ளார்.
ஈரானில் வெடித்த ஹிஜாப் எதிர்ப்பு புரட்சி
இந்த சம்பவம் ஈரானில் மட்டுமன்றி உலக நாடுகள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மாஷா அமினி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாஷா அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவத்தொடங்கியது.
ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தங்கள் தலைமுடியை வெட்டியும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் வீதிகளில் கடுமையான முறையில் போராட்டக்களை முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டம் பரவுவதை தடுக்க இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலும் தற்போது வரை ஈரானில் இடம்பெறும் போராட்டங்கள் முடிவடையும் நிலையில் இல்லையென கூறலாம்.
ஈரானில் பெண்களுக்கு உள்ள கடுமையான கட்டுப்பாடுகள்
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விஷயத்திற்கும் சட்டம், விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன.
இது நாட்டிற்கு நாடு வேறுபடும் உதாரணமாக வண்டி ஓட்டுவதற்கான உரிமம் பெறுவது 18 வயது என்று பெரும்பாலான நாடுகளில் இருக்கிறது.
இதில் பாலின அடிப்படையில் கூட ஒரு சில நாடுகளில் பெண்களுக்கு பல தடைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
ஆடை
ஈரானிய பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கான மிகப் பெரிய ஒரு கட்டுப்பாடு என்பது எங்கு சென்றாலும் ஹிஜாப் அணிய வேண்டும் என்பதுதான்.
பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணியும் வழக்கம் கொண்டுள்ளனர்.
ஆனால் எல்லா நாடுகளிலுமே பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் இல்லை.
ஹிஜாப்பிற்கு உள்ளே அணியும் ஆடைகள் தளர்வாக இருக்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல் தலை முதல் கால் வரை அவர்கள் முழுவதுமாக ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.
இந்த கட்டுப்பாடுகளை ஏதேனும் ஒரு பெண் மீறியதாக சந்தேகிக்கப்பட்டால் அந்தப் பெண்ணை அடிப்பதற்கு காவல்துறைக்கு உரிமை இருக்கிறது,
அது மட்டுமல்லாமல் ஆறு மாதங்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கலாம்.
திருமணம்
ஈரானிய சட்டத்தின்படி தந்தை, தான் தத்து எடுத்த மகளை திருமணம் செய்து கொள்ள அனுமதி இருக்கிறது.
2014 ஆம் ஆண்டு இந்த சட்டம் மற்றும் பழக்கம் தடை செய்யப்பட்டாலும், அதன் பிறகு பாதுகாவலரின் அமைப்பு மற்றும் மதத் தலைவர் அதனை ரத்து செய்து செய்தனர்.
தத்தெடுக்கப்பட்ட பெண்ணை ஈரானிய தந்தை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
தற்போதுகூட நீதிமன்றத்திடமிருந்து இதற்கான அனுமதி பெற்று திருமணம் நடைபெற்று வருகிறது என்பது வருத்தப்படக் கூடியதாக இருக்கிறது.
ஈரானில் பெண்ணின் திருமண வயது எவ்வளவு என்பது பல முறை மாற்றப்பட்டுள்ளது.
ஒரு காலகட்டத்தில் ஒன்பது வயதிலேயே சிறுமிகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற வழக்கமும் இருந்தது.
தற்பொழுது சட்டப்படி ஒரு பெண் 13 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல ஆணுக்கு 15 வயது என்பது திருமண வயது. ஈரானிய பெண் தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதுவும் குடும்ப தலைவரின் ஒப்புதலோடு திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
ஆனால் ஈரானிய ஆண் நான்கு முறை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டமும் இருக்கிறது.
திருமணத்திற்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கிறதே பெண்களுக்கு விவாகரத்து வழங்குவதற்கு அனுமதியும் சுதந்திரமும் இருக்கிறதா என்ற கேள்வி எழும்புகிறது.
தன்னுடைய கணவன் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார், தண்டனை பெற்று சிறைச்சாலையில் இருக்கிறார் அல்லது போதை பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் ஆகிய காரணங்கள் அடிப்படையில் ஒரு பெண் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறலாம்.
ஆனால் ஆண்களுக்கான விவகாரத்து மிகவும் எளிதானது. எனக்கு இந்த பெண்ணை பிடிக்கவில்லை நான் விவாகரத்து செய்கிறேன் என்று தனது மனைவியை வெறும் வார்த்தைகளால் கூறி விவாகரத்து செய்து விடலாம். இதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை, காரணங்களும் தேவையில்லை.
வாரிசு உரிமை
வாரிசு உரிமை சட்டத்தின்படி, ஈரானில் ஒரு மனைவி இறந்துவிட்டால், அவரது சொத்துக்கள் முழுவதுமே அவரது கணவனுக்கு சென்று விடும்.
ஆனால் ஒரு கணவன் இறந்து போனால் விதவையான அந்த பெண்ணுக்கு கணவனின் சொத்தில் எட்டில் ஒரு பங்கு தான் கிடைக்கும்.
அதேபோல இறந்த போன தந்தையின் சொத்தில் மகளுக்கு எவ்வளவு பங்கு கொடுக்கப்படுகிறதோ அதை விட இரண்டு மடங்கு பங்கு மகனுக்கு கொடுக்கப்படும்.
விளையாட்டு அரங்கத்தில் கூட கட்டுப்பாடு
ஈரானில் விளையாட்டு அரங்கத்தில் ஆண்களோடு அமர்ந்து பெண்கள் விளையாட்டை ரசிக்க முடியாது.
இவ்வாறு ஈரானில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.