அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..!
மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் மேற்கொள்கின்ற வான்வழித் தாக்குதல் மூலம் ஈரானை சரணடைய வைக்க முடியுமா? அல்லது அங்கு ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? என்று கேட்டால் “நிச்சயமாக இல்லை” என்பதே பதிலாகும்.
ஈரான் மீது தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள் மீது வான்வழியாக விமான மற்றும் ஏவுகணைத் தாக்கல்களை நடத்தி ஈரானின் ஆட்சி அதிகாரத்தை மாற்றிட முடியாது.
அதற்கு ஈரானின் பலமான அரசியலமைப்பு, அதன் சனத்தொகை, நிலப்பரப்பு, எல்லை நாடுகள், அது பின்பற்றும் வெளிநாட்டு கொள்கைகள், நாட்டின் கேந்திர அமைவிடம், ஈரானிய மக்களின் தேசிய உணர்வு என பல காரணங்கள் ஈரானிய அரசுக்கு சாதகமாகவும், பலமானதாகவும் உள்ளது.
அந்த பலமான அடிப்படைகளை கொண்டுள்ள ஈரானில் நேரடியாக வெளிநாட்டு ராணுவம் தரையிறக்கி தாக்குதல் நடத்துவது சாத்தியமல்ல. தாக்குதல் நடத்தி ஈரானி நிலப்பரப்பை கட்டுப்படுத்தாமல் ஆட்சி மாற்றத்தை ஒருபோதும் நடத்த முடியாது. இதற்கான காரணங்களை ஆய்வது அவசியமானது.
வல்லரசு நாடாக திகழும் ஈரான்
ஒரு அரசு நிலை பெறுவதற்கு நிலம், மக்கள், அரசாங்க, இறைமை ஆகிய நான்கு கூறுகள் இன்றியமையாதவை. நிலமின்றி ஒரு அரசு நிலைத்திட முடியாது. இன்றைய உலகளாவிய அரசியற் சூழலில் பெரிய நிலப்பரப்பை கொண்ட அரசுகள் தான் வல்லமை வாய்ந்த நாடுகளாக வளர்ச்சி அடைந்திருக்கின்றன.

இந்த அடிப்படையில், ஈரான் 1,648,195 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள மத்திய கிழக்கின் இரண்டாவது பெரிய நாடு என்பதோடு உலகின் 17வது பெரிய நாடாகவும் உள்ளது.
ஈரான் ஏழு இஸ்லாமிய நாடுகளுடன் நில எல்லைகளைக் கொண்டுள்ளது. அவை முறையே மேற்கில் ஈராக்கில் 1,599 கி.மீ . வடமேற்கில் துருக்கி 534 கிமீ, ஆர்மீனியா 44 கிமீ, அசர்பைஜான் 689 கிமீ, வடகிழக்கு துர்க்மெனிஸ்தான் 1,148 கிமீ, கிழக்கில் ஆப்கானிஸ்தான் 921 கிமீ , தென்கிழக்கில் பாகிஸ்தானுடன் 959 கிமீ நீளமான நில எல்லையையும் கொண்டதான மொத்தம் 5,894 கிலோமீட்டர் நீளமான எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.
யாராலும் வீழ்த்த முடியாத இயற்கை பலம்
இந்த அடிப்படையில் எல்லை நாடுகளாக இஸ்லாமிய நாடுகள் இருப்பதனால் இவர்களுக்கிடையில் பல்வகை முரண்கள் இருப்பினும் மதத்தின் பெயரால் ஈரானுக்கு இயல்பான பாதுகாப்பை அளிக்கிறது.
இந்த சமுத்திரத்தின் ஓமான் வளைகுடாவிலும், பாரசீக வளைகுடாவிலும், கஸ்பியன் கடலிலும் சுமார் 2,815 கிலோமீட்டர் நீளமான கடற்கரையை கொண்டுள்ளது. வடக்கில் காஸ்பியன் கடல் கரையோரம் சுமார் 740 கி.மீட்டர்களும். ஈராக் எல்லையில் இருந்து ஹோர்முஸ் நீரிணை வரையான பாரசீக வளைகுடாக்கரை 1,700 கி.மீ நீளமானது.

ஹோர்முஸ் நீரிணையில் இருந்து பாகிஸ்தான் எல்லை வரையான ஓமான் வளைகுடா கரை 375 கி.மீ நீளமானது. ஆகவே பாரசீக வளைகுடா, மற்றும் ஓமான் வளைகுடா கடற் பகுதியின் கிழக்குக்கரை முழுவதும் ஈரான் நாட்டுக்குச் சொந்தமானது.
இந்த அடிப்படையில் வளைகுடாவுக்குள் நுழைவதற்கான கோர்மோஸ் நீரினை ஈரானின் கட்டுப்பாட்டிலும் அதன் செல்வாக்கு மண்டலத்துக்குள்ளும் இருப்பதனால் பாரசீக வளைகுடாவுக்குள் ஈரானின் அனுமதியின்றி உள்நுழைவது முடியாத காரியம்.
கேந்திர ஸ்தானமாக இருப்பதே வெற்றி
ஈரான் சர்வதேச நாடுகளுக்கான சக்தி வழங்கும் போக்குவரத்து பாதையின் பிரதான நுழைவாயிலின் கேந்திர ஸ்தானத்தில் இருப்பது அதற்கு மேலும் பலத்தை சேர்க்கிறது.
அதே நேரத்தில் ஓமான் வளைகுடாவினதும் பாரசீக வளைகுடாவினதும் கிழக்குப்புற கடற்கரை முழுவதும் ஈரானுக்கு சொந்தமானதாக இருக்க மேற்குப் பக்க கரையோரத்தில் ஈராக், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஒமான் ஆகிய நாடுகளைக் கொண்டுள்ளது.
ஆனால் இந்த நாடுகள் அனைத்தும் இஸ்லாமிய நாடுகளாக இருப்பினும் இவை பயத்தாலும், நயத்தாலும் அமெரிக்க செல்வாக்கு மிகுந்த நாடுகளாக இருப்பதும் இங்கே கவனத்திற்குரியது.

ஈரான் நிலப்பரப்பில் எல்லைகளையும் உட்பகுதிகளையும் வரையறுக்கும் மூன்று பெரிய மலைத்தொடர்கள் உள்ளன. இவை பண்டைய காலங்களில் படையெடுப்புகளைத் தடுக்கும் இயற்கை அரண்களாகவும், வர்த்தக பாதைகளுக்கு தடைகளாகவும் இருந்தன.
இந்த மூன்று பக்க மலைத்தொடர்களும் ஈரானின் மத்திய பீடபூமியைச் சுற்றி ஒரு இயற்கைக் கோட்டையை உருவாக்குகின்றன. இவை நாட்டின் வரலாறு, காலநிலை, கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஆழமாக செல்வாக்கு செலுத்துகின்றன.
சாக்ரோஸ் மலைத்தொடர் (Zagros Mountains) இது மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் துருக்கி மற்றும் ஈராக் எல்லையிலிருந்து ஆரம்பித்து, மேற்கு ஈரான் வழியாக தென்கிழக்கு நோக்கி, பாரசீக வளைகுடா வரை பரவியுள்ளது. சுமார் 1,500 கி.மீ நீளம் கொண்டது ஈராக் மற்றும் துருக்கி எல்லையிலிருந்து வரும் படையெடுப்புகளை தடுக்கும் இயற்கை தரைவழி தடுப்புச்சுவராக இம்மலைத்தொடர் விளங்குகிறது. இது இன்றைய சூழலுக்கும் ஈரானுக்கு கைகொடுக்கும்.
ஈரானிய பீடபூமியை பாதுகாக்கும் அரண்
அடுத்து அல்போர்ஸ் மலைத்தொடர் (Alborz Mountains) இது ஈரானின் வடக்குப் பகுதியில், காஸ்பியன் கடலுக்கு இணையாக அசர்பைஜான் பகுதியிலிருந்து ஆரம்பித்து, காஸ்பியன் கடலின் தெற்கு கரையோரமாக, ஆப்கானிஸ்தான் எல்லை வரை நீண்டுள்ளது. இமய மலைத்தொடலின் நீட்சியாகக் கருதப்படும் இம்மலைத்தொடர் சுமார் 900 கி.மீ நீளம் கொண்டது.
பண்டைய காலத்தில் மத்திய ஆசியாவிலிருந்த நாடோடிப் படையெடுப்பாளர்களான மங்கோலியர்கள், துருக்கிய படையெடுப்புக்களில் இருந்து ஈரானிய பீடபூமியை இது பாதுகாக்க உதவியது. அது இன்றைக்கும் பொருத்தமாகவே உள்ளது. ஈரானின் தலைநகர் டெஹ்ரான் இம்மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
அவ்வாறே கிழக்கு ஈரானிய மலைத்தொடர்கள் கிழக்கு எல்லையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையோரமாக கெஹ் - இ சுலைமான் மலைகள், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது பலுசிஸ்தான் மலைகள், தென்கிழக்கில் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வறண்ட, கரடுமுரடான மலைகள் என பல சிறிய மலைத்தொடர்கள் இணைந்து கிழக்குப்புறமாக ஒரு பரந்த அரணாக அமைந்து ஈரானுக்கு தரைவழியான இயற்கை பாதுகாப்பை அளிக்கிறது. இவ்வாறு மூன்று பிரதான மலைதொடர்கள் முக்கோண வடிவில் ஈரானின் மத்திய பீடபூமியையும் பாலலை நிலங்களையும் பாதுகாக்கின்ற தடுப்புச் சுவராக இருக்கிறது.

ஈரானின் மிகப்பெரிய பலமாக இருப்பது ஒன்பதரை கோடி மக்கள் தொகைதான், அதுவே அந்நாட்டுக்கான பாதுகாப்பில் முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. ஈரான் புராதன கால பாரசீக நாட்டின் பெரும் பகுதி என்ற அடிப்படையில் ஈரானில் பாரசீக பழங்குடி மக்களே-65% உள்ளனர் இவர்களே அரசு ஊழியர்கள் மற்றும் ஊடகங்களில் படைக்கட்டுமானங்களிலும் முதன்மைப் பெற்றுள்ளனர்.
இவர்கள் கடந்த 45 ஆண்டுகளாக ஈரானிய தேசியவாதம் என்ற ஒரு குடைக்கு இறுகக் ஒருங்கிணைந்து கட்டமைக்கப்பட்டுள்ளனர் என்ற அடிப்படையில் இவர்களிடம் இயல்பான மேற்குலக எதிர்ப்பு சிந்தனை கருத்து மண்டலமே உள்ளது.
அதே நேரத்தில் முக்கிய சிறுபான்மையினராக துருக்கிய மொழி பேசும் அசர்பைஜானிகள் 16-24% வடமேற்கு ஈரானில் வாழ்கின்றனர். குர்துகள் 7-10% மேற்கு ஈரான்னிலும், லூர்கள் 6% மத்திய மற்றும் தெற்கு ஜாக்ரோஸ் பிரதேசத்திலும், அரேபியர்கள் 2-3% தென்மேற்கு குசெஸ்தான் பகுதியிலும், பலுச்சுகள் 2% தென்கிழக்கு சிஸ்தான்-பலுசிஸ்தான் பகுதியிலும், துர்க்மேன்கள் 1-2% வடகிழக்கு பகுதிகளிலும் வாழ்கின்றனர். ஆயினும் அங்கு பார்சீ ஆட்சி மொழியாக உள்ளது.
உள்நாட்டு அரசியல் நிர்வாகப் ஒழுங்குமுறை
குர்துகள் மற்றும் பலுச்சுகள் தற்போத அதிக ஆயுத மோதல்களில் ஈடுபடுகின்றனர். அசர்பைஜானிகள் மற்றும் அரேபியர்கள் பொதுவாக சிவில் உரிமை மற்றும் பண்பாட்டு தன்னாட்சிக்காக போராடுகின்றனர்.
இந்த இனக்குழுக்கள் தங்களின் தாயகப் பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் இன்றைய நவீன ஈரானிய அரசு மையப்படுத்தப்பட்டதாக ஆட்சியலைக் கொண்டிருப்பதனால் அப்பகுதிகளின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் மத்திய அரசே மேலாதிக்கம் செலுத்துகிறது என்பதனால் இவர்களால் ஈரானின் இறைமையை பாதிக்கக்கூடிய அளவிற்கு வினைதிறனாக ஈரானிய நிலப்பரப்புக்குள் இதனையும் சாதித்து விட முடியாது.
ஆயினும் ஈரானுக்குள் சிறுபான்மையினர் போராடுவது என்பது இதனுடைய ஒரு பலவீனமான பகுதியாக என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஈரானின் உள்நாட்டு அரசியல் நிர்வாகப் ஒழுங்குமுறை பிரிப்பை நோக்கினால் நாடு, மாகாணம் (Ostan), கவுண்டி (Shahrestan), மாவட்டம் (Bakhsh), நகரம் / கிராமம் பிரித்து செல்ப்படத்தப்படுகிறது.
நாடு என்ற நிலையில் அதிஉச்ச தலைவராக ஆயத்துல்லாக்கள் தலைமை தாங்குவர். அதனைவிட மதகுருக்கள்சபை, பாராளுமன்றம், நிர்வாகக் கட்டமைப்புக்கள் உள்ளடங்களாக நிர்வாக ஒழுங்குபடுத்தலை நோக்கினால் அது 31 மாகாணங்களாக (Provinces – Ostan) பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாகாணத்தையும் ஒரு ஆளுநர் (Governor General) நிர்வகிப்பார். இவர்களை மத்திய அரசு நியமிக்கிறது. ஒவ்வொரு மாகாணமும் பல Shahrestan (கவுண்டி) ஆகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு கவுண்டிக்கும் ஒரு நிர்வாகத் தலைவர் உள்ளார். ஒவ்வொரு கவுண்டியும் மேலும் Bakhsh (மாவட்டம்) ஆகப் பிரிகிறது. இவை நகர மற்றும் கிராம நிர்வாகத்தை இணைக்கும் இடைநிலை அமைப்பு தொழில்படும்.
அதே நேரத்தில் ஈரானின் பாதுகாப்பு கட்டமைப்பை நோக்கினால் முதலாவது இராணுவம், சீரான மற்றும் நவீன ஆயுதங்கள் கொண்ட பொதுநிலை ராணுவம். இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை(Islamic Revolutionary Guard Corps) இதுவே அரசியல் ரீதியாக மிகவும் வலுவானது. இது உள்நாட்டு நிலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது.
விமானப் படை, கடல் படை, நாட்டு ராணுவம் அனைத்தையும் இதுவே ஒருங்கிணைக்கிறது. உள்நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டு தாக்குதல் எதிர்க்கவும் ஏற்றதாக கட்டமைப்பு செய்யப்பட்டிருக்கிறது என்ற அடிப்படையில் ஈரானின் முழுமையான பாதுகாப்பு அமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. படைவலுவில் மனிதவள(Manpower) செயற்பாட்டுத் திறனில் உள்ள ராணுவம் 600,000 – 650,000 ஆக உள்ளது.
ரிசர்வ் படைகள்(Reserve forces): 350,000 ஆகவும், பராமிலிட்டரி (Basij militia) சுமார் 1–2 மில்லியன் வரை உள்ளதென கணிப்பிடப்படுகிறது. ஆகவே உலக அளவில் பெரிய நிலையான ராணுவங்களில் ஈரானிய ராணுவமும் ஒன்று.
ஈரானின் ஆயுத பலம்
அதேநேரம் ஈரானின் இராணுவ, ஆயுத, மற்றும் உபகரணங்கள் பற்றி பார்க்கின்ற போது ஈரானிய விமானப்படையினிடம் 300–350 போர்விமானங்கள் அவை பழைய அமெரிக்க மற்றும் ரஷ்ய தொழில்நுட்ப கலவை கொண்ட F-14 மற்றும் MiG, Sukhoi வகை விமானங்கள் உள்ளன. 500 வரை போர் ஹெலிகாப்டர்கள் உள்ளன.
அதேநேரத்தில் ஈரானிய கடற்படையின் கட்டுப்பாட்டிலேயே பாரசீக வளைகுடாவையும், ஹோர்மூஸ் நீரிணையையும் கட்டுப்படுத்தக் கூடிய அளவிலான சிறிய தாக்குதல் வேகப்படகுகள் (fast attack boats) அதிகம் உள்ளது. சிறிய ரக சில நீர்மூழ்கிகள் (submarines), மற்றும் சில போர்க்கப்பல்களும் உள்ளன.
ஈரானிய இராணுவத்திடம் 1,500–2,000 டாங்கிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கவச வாகனங்களும் உள்ளது. ஈரானின் மிக வலுவான ஆயுதம் பளாஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic missiles) இவை 300km தொடக்கம் 4000km வரையான துார வீச்சு எல்லை கொண்டதாகவும் உள்ளது.

ஈரானிடம் உள்ள அதிநவீன ஆளில்லா விமானங்கள் மற்றும் அதன் உயர் தொழில்நுட்பம் அதிக வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதுவே இன்று வளைகுடாக் கடலிலும், வளைகுடா நாடுகளிலும் அமெரிக்காவுக்கும் அவை அச்சுறுத்தலாகவே விளங்குகின்றன.
இத்தகைய ஈரானின் கேந்திர நிலையம், அதனுடைய மக்கள் தொகை,பரந்த நிலம், இயற்கை பாதுகாப்பு, தொழில்நுட்பம் என்பவற்றை ஒருங்கிணைத்து பார்க்கின்றபோது ஒரு வெளிநாட்டு ராணுவம் ஈரான் நிலத்தில் தரையிறங்கி தாக்குதலில் ஈடுபடுவது என்பது மிகக் கடினமானது மாத்திரமல்ல மிகப்பெரும் உயிரிழப்பையும், சேதத்தையும் ஏற்படுத்த வல்லது.
அவ்வாறு ஒரு தாக்குதலை தொடங்கினால் அது மூன்றாம் உலகப் போருக்கான சாத்தியத்தை தோற்றுவிக்கும் என்பது மாத்திரமல்ல உலகம் தழுவிய பெரும் பொருளாதார நெருக்கடிகளையும், விவசாய உற்பத்திகளையும் பெருமளவில் பாதிக்கும் என்பதனால் ஒரு நேரடி தரையிறக்க தாக்குதலை மேற்கொள்ள முடியாது.
அவ்வாறு ஒரு தரையிறக்க தாக்குதலை மேற்கொள்ளாமல் ஈரானை ஒருபோதும் சரணடைய வைக்க முடியாது. நவீன தொழில்நுட்ப ஆயுதங்களைப் பயன்படுத்தி ஈரானின் அடிக்கட்டுமானங்களையும், அதன் பொருளாதாரக் கட்டுமானங்களையும் அழிக்கலாம்.
ஆனால் அவர்களை வெற்றிகொள்ள முடியாது. ஈரானின் தரையில் இறங்கி எந்தவொரு நாட்டின் இராணுவமும் சண்டையிட முடியாது. ஈரானின் புதிய தற்காப்பு போர் வியூகங்களும், தாக்குதல்களும் பாரசீகர்களுகே உரித்தான போரியல் மரபு சார்ந்தது. எனவே ஈரானை ஆக்கிரமிக்காமல் ஈரானில் ஒரு ஆட்சிமாற்றத்தை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது.