அம்பாந்தோட்டையில் யானை தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு!
அம்பாந்தோட்டை - பூந்தல வனப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று(26.12.2025) மாலை பூந்தல வனப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
அம்பாந்தோட்டை, வெலிஹட்ட சந்தி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற போது, பெண்ணை காட்டு யானை தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், பெண் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்து அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பெண்ணின் சடலம் அம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.