வெளிநாடொன்றில் 7 வருடங்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட பெண் - 20000 டொலரை வெகுமதியாக அறிவித்த பொலிஸார்
2019ஆம் ஆண்டு பிரிட்டனில் காணாமல் போயிருந்த மூன்று பிள்ளைகளின் தாயின் உடல் எச்சங்கள், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொலைச் சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த 44 வயதான ஜோன் ஷீனின் உடல் எச்சங்கள், அவர் காணாமல் போன இடத்திலிருந்து 60 மைல்களுக்கும் அதிகமான தொலைவில் உள்ள தென்மேற்கு லண்டனின் ஃபெல்தாம் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக, இங்கிலாந்து நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய துறைமுக நகரமான சவுத்தாம்ப்டனைச் சேர்ந்த 56 வயதான ஹாம்ப்ஷயர் என்பவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீ விபத்தில் சிக்கிய உடல் எச்சங்கள்
குறித்த பெண், கடைசியாக டிசம்பர் 5, 2019 அன்று, ஃபேர்ஹாமிலிருந்து தனது சொந்த ஊரான சவுத்தாம்ப்டனுக்கு ஒரு தோழியுடன் சென்ற பொழுது காணாமல் போயுள்ளார்.
அதன் பின்னர், பல மாதங்களாக அவரிடமிருந்து எந்தத் தகவலும் வராததால், குடும்ப உறுப்பினர்கள் பெப்ரவரி 2020ஆம் ஆண்டு பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளனர்.
“லிட்டில் ஜோ” என்றும் அறியப்பட்ட, ஐந்து அடி உயரமுள்ள அந்தப் பெண் காணாமல் போனது குறித்து பொலிஸார் ஒரு விரிவான விசாரணையை ஆரம்பித்தனர்.
இதன்போது, 4,000-க்கும் மேற்பட்ட தகவல்களும், 300-க்கும் மேற்பட்ட வாக்குமூலங்களும் பெறப்பட்டன. அவர் இருந்த பன்னிரண்டுக்கும் மேற்பட்ட முகவரிகளிலும், பல படகுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
பெட்பான்ட் லேக்ஸ் கண்ட்ரி பார்க் அருகே இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் தீ விபத்து ஏற்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 12 அன்று அந்த வழியே சென்ற ஒருவர் அந்த எலும்புக்கூடு எச்சங்களை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, டிஎன்ஏ மற்றும் தடயவியல் சோதனைகள் மூலம் அந்த உடல் ஷீனுடையது என்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
20,000 டொலர்கள் வெகுமதி
அவருக்கு நிலையான முகவரி, வங்கிக் கணக்கு அல்லது கார் எதுவும் இல்லாததால், பொலிஸாரின் விசாரணை கடுமையாகத் தடைபட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 2020ஆம் ஆண்டு, ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அவரது இரண்டு மகள்களான லெய்லா மற்றும் ஹெய்லி, தங்கள் தாயை மிகவும் இனிமையான மற்றும் நட்பான பெண் என்று விவரித்தனர். இருப்பினும், அவர் ஒரு பாலியல் தொழிலாளியாகவும் பணியாற்றியதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது விசாரணைக்கு புதிய வழிகளைத் திறந்துள்ளது என்று துப்பறியும் தலைமை ஆய்வாளர் டோபி எல்காக் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த விசாரணைக்கு உதவும் துல்லியமான தகவல்களை வழங்குபவர்களுக்கு 20,000 டொலர்கள் வெகுமதி வழங்க கிரைம்ஸ்டாப்பர்ஸ் மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது.