எரிபொருள் விலை நெருக்கடி: நாடு முழுவதும் 500 நிலையங்கள் ஆபத்தில்
இலங்கையில் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களின் விநியோக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 500 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் எச்சரித்துள்ளது.
500 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் இந்த நிலைமை தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அங்கு Lanka IOC, Sinopec மற்றும் RM Packs உள்ளிட்ட எரிபொருள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் எரிபொருளை, அதனை இறக்குமதி செய்வதற்கான செலவைவிட குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் எரிபொருளை வழக்கமான முறையில் விநியோகிப்பதில் நிறுவனங்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த நிலைமை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு மட்டுமன்றி, அன்றாடம் போதுமான எரிபொருள் கிடைக்காமல் சிரமப்படும் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திடம் கோரிக்கை
அரசுக்கு சொந்தமான இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் எரிபொருளை வழங்கி வருகின்றது.
ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்வதால், அதிகளவான செயற்பாட்டு செலவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் விநியோகத்தை சீராகப் பேணுவது மேலும் சிக்கலாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் வகையில், எரிபொருள் விலையை ஒழுங்குபடுத்துவதற்காக சுயாதீனமான நிறுவனமொன்றை அமைக்குமாறு சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான எரிபொருள் விலையை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சவூதியில் கைதான இலங்கை இளைஞன் அனோஜனுக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை