மன்னாரில் தங்க நகை மோசடி செய்து சிக்கிய பெண்! நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவு
மன்னாரில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண்ணை, தலா 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரை மன்னார் நீதிமன்றத்தில் நேற்று (16.03.2026) முன்னிலைப்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சொத்துக்களை முடக்க உத்தரவு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை அப்புறப்படுத்த உதவியதாகக் கூறி, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு குறித்த பெண்ணை கைது செய்துள்ளது.

2019 முதல் 2023 வரை தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபர், அதில் இருந்து கிடைத்த வருமானத்தை பயன்படுத்தி ஒரு மாடிக் குடியிருப்பு, ஐந்து அறைகள் கொண்ட வீடு, ஒரு கார் மற்றும் சுமார் 360 பவுண்கள் எடையுடைய தங்க நகைகள் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தங்க நகைகள் பின்னர் அடகு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதையடுத்து, சட்டவிரோத நிதியில் வாங்கப்பட்டதாகக் கருதப்படும் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு கார் தொடர்பாக மன்னார் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன், அவற்றை முடக்க நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டுள்ளது.
மேலும் விசாரணைகளில், சந்தேக நபரின் மாமியாரான குறித்த பெண் பல நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைத்து பின்னர் மன்னார் பகுதியிலுள்ள நகைக் கடைகளுக்கு விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இதற்கமைய, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட தங்க நகைகளின் மூலத்தை அறிந்திருந்தும் அவற்றை அடகு வைத்து விற்ற குற்றச்சாட்டின் பேரில், குறித்த பெண் கடந்த 15.03.2026 அன்று கைது செய்யப்பட்டார்.

அவரை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்திய பின்னர், நேற்று (16) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, நீதவான் இரு சரீர பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு மீண்டும் எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
முத்துவிடம் ரோஹினி பற்றிய முழு உண்மையை கூறிய PA தினேஷ்... சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam