மொட்டுக் கட்சியின் வேலைத்திட்டம் சிறுபிள்ளைத்தனமானது! சுனில் ஹந்துன்நெத்தி விமர்சனம்
இந்த நாட்டைச் சூறையாடிய மொட்டுக் கட்சியினருக்கு எமது தூய்மையான வேலைத்திட்டம் சிறுபிள்ளைத்தனமாகவே தெரியும் என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அநுர அரசின் அமைச்சர்கள் சிறுபிள்ளைத்தனமாகச் செயற்படுகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்த விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
படுகுழியில் தள்ளியவர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் நாட்டைப் பொருளாதார ரீதியாகப் படுகுழியில் தள்ளியவர்களுக்கும், ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தில் ஊறியவர்களுக்கும் எமது புதிய மற்றும் வெளிப்படையான வேலைத்திட்டங்கள் சிறுபிள்ளைத்தனமாகத் தெரிய வாய்ப்பில்லை.
நாம் எடுக்கும் ஒவ்வொரு தீர்மானமும் மக்களின் நலனை நோக்கியதே தவிர, தனிநபர் இலாபங்களுக்காக அல்ல, தற்போதைய அமைச்சர்கள் எந்தவித வரப்பிரசாதங்களையும் எதிர்பாராது நாட்டின் கைத்தொழில் மற்றும் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் குறை கூறுவதை விடுத்து, ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கினால் நாடு முன்னேறும்.
மொட்டுக் கட்சியினர் மீண்டும் அதிகாரத்துக்கும் வரும் நோக்குடன் இவ்வாறான முதிர்ச்சியற்ற கருத்துக்களை முன்வைக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறுகின்றமையை நாட்டு மக்கள் நம்பமாட்டார்கள். ஏனெனில் நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri