ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது..
ஈழத்தமிழ் அரசியல் பரப்பில் தமிழ்த்தேசியமும், கொள்கைகளும், கோட்பாடுகளும் சீரழிந்து சின்னா பின்னப்பட்டு போயிருக்கும் இன்றைய சூழலில் தமிழ் மக்களுடைய விடுதலைக்கான வழிவகை என்ன? என்பதை கண்டறிய வேண்டியது அவசியமானது. அந்த போராட்டப் பாதையை யார் வழி நடத்துவது? என்பது அதனிலும்விட முக்கியமானது. அத்தகைய ஒரு வழி வகையை தேடுகின்ற, கண்டறிகின்ற சிந்தனை போக்கிற்கு செல்வதற்கும் தமிழ் மக்களுக்கு நிறுவன மயப்படுத்தப்பட்ட பொதுத் தேசியசபை அல்லது கட்டமைப்பு தேவையாக உள்ளது.
இனி ஈழத் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன?
இத்தகைய பின்னணியில் 2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான கருத்துக்கள் மேற்குறிப்பிட்டவர்களிடமிருந்து தொடர்ந்து எழுந்ததன் பின்னணியில் அதனை செயற்பாட்டு வடிவத்திற்கு கொண்டு வருவதற்கான ஒரு அமைப்பை தாயகத்தின் முன்னணி அரசியல் செயற்பாட்டாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும், பொது அமைப்புகளும் இணைந்து "தமிழ் மக்கள் பொதுச் சபை" (Tamil people's general assembly) என்ற அமைப்பை உருவாக்கினர்.
தேசியப் பொதுக் கட்டமைப்பு
அந்த அமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கருத்து பரிமாற்றங்களை கூடாக ஒரு பொது முடிவுக்கு வந்து அனைவரும் சமதரப்புக்கள் என்னும் வகையில், 7 தமிழ்த் தேசிய கட்சிகளும், தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து 22-07-2024 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டனர். இரு தரப்பினரின் இணைவில் உருவாக்கப்பட்ட “தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு” கடந்த 2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி கணிசமான தமிழர்களை வாக்கை ஒன்று திரட்டி ஒரு முன்னுதாரணமான செயற்பாட்டை காண்பித்தும் இருக்கிறது.

இந்த அடிப்படையில்தான் தமிழ் மக்களுக்கான பொதுச் சபை அல்லது கட்டமைக்கப்பட்ட நிறுவனம் இப்போது தேவையாக உள்ளது. கடந்த வாரம் திருகோணமலையில் சமூக செயற்பாட்டாளரும் ஆன்மீகவாதியும் ஆகிய வேலன் சுவாமிகள் தலைமையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றெடுப்பதற்கான ஒரு அமைப்பு "ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று" என்ற பெயரில் அதனுடைய கொள்கை பிரகடனம் 20 பக்கம் கொண்ட அறிக்கையாக வெளியிட்டும் இருந்தனர்.
இந்தப் பெருமன்றம் பற்றிய வியாக்கியானமோ அல்லது குறை கூறுவதோ இப்பந்தியின் நோக்கம் அல்ல. ஆனால் ஈழத்தமிழர் அரசியல் பரப்பில் குடும்பச்சண்டையில் ஈடுபட்டு இருக்கின்ற போது அனைவரையும் உள்ளடக்கி ஒரு தேசிய பொதுச்சபை ஒன்றை உருவாக்குவதே இன்றைய காலத்தின் தேவையாகும்.
அதை விடுத்து குறிப்பிட்ட சாரார் மட்டும் கலந்து கொண்டால் ஏற்கனவே பொது வேட்பாளர் விடயத்தில் நடந்தவை போன்று தொடர்ந்து செயல்ப்பட முடியாமற்போகும். அவ்வாறு நடக்காமல் இருப்பதற்கான உபாயங்களை பின்பற்ற வேண்டும் என்பதே இப்பந்தியின் வேண்டுகோளாகும். இத்தகைய பொதுசபைகள் பற்றி உலக வரலாற்று நிகழ்ந்த முன்னுதாரணங்களை கொண்டு புரியவைப்பது அவசியமாகும்.
அரசியலமைப்பு கூட்டமைப்புச் சட்டம்
பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்டிருந்த அமெரிக்க குடியேற்ற மக்கள் தமது விடுதலைக்கான பயணத்தில் அமெரிக்க சுதந்திரப் போர் 1775 ஏப்ரலில் தொடங்கியது 1776 ஜூலை 4 அன்று வெளியிடபடபட்ட சுதந்திரப் பிரகடனம் "அனைத்து மனிதர்களும் சமமாக படைக்கப்பட்டுள்ளனர்" மற்றும் "வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியை நாடும் உரிமைகள்" உள்ளிட்டவற்றை அறிவித்தது.
1781ல் ஜார்ஜ் வாஷிங்டனின் வெற்றியைத் தொடர்ந்து 1783 பாரிஸ் ஒப்பந்தம் அமெரிக்க சுதந்திரத்தை முறையாக அங்கீகரித்தது. புதிய ஐக்கிய அமெரிக்கா உலகின் முதல் நவீன கூட்டாட்சிக் குடியரசரசின் முதல் அரசியலமைப்பு கூட்டமைப்புச் சட்டம் (Articles of Confederation) 1781 இல் நடைமுறைக்கு வந்தது. அது பலவீனமான கூட்டமைப்புச் சட்டமாக இருந்ததனால் உள்நாட்டு கிளர்ச்சிகள் ஏற்பட்டதன் விளைவு ஐக்கிய அமெரிக்காவிற்கான வலுவான அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அமெரிக்கா வரலாற்றில் Philadelphia நகரில் 1787 மே–செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற மிகவும் முக்கியமான கூட்டங்களாகும். இதனையே பிரடெல்வியா (Philadelphia) மாநாடு என் அழைக்கப்படுகிறது.

இதற்கு George Washington தலைமை தாங்கி மாநாட்டை வழிநடத்தினார். James Madison “அரசமைப்பின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். Benjamin Franklin முக்கிய ஆலோசகராக செயற்பட்டு அமெரிக்க அரசமைப்பு உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் அரசமைப்பை வடிவமைத்த பிரடெல்வியா மாநாடு என்ற வரலாற்று கூட்டத்தை முன்னுதாரணமாக ஈழத்தமிழர் மனதில் நிறுத்தி தமிழ் தரப்பின் அனைத்து அரசியல் கட்சிகளையும் சிவில் சமூகங்களையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகின்ற செயல் திட்டம்தான் ஆக்கபூர்வமானதும் செயற்திறன் வாய்ந்ததாகவும் செயற்கட முடியும்.
இதே போலவே பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்டிருந்த அயர்லாந்து மக்கள் தமது விடுதலைக்கான பயணத்தில் அவர்கள் உருவாக்கிய“ஐரிஷ் சிம்பெயின் (Irish Sinn Féin) என்பது “நாம் நாமே”(Ourselves Alone) என்ற பொருள்பட பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து அயர்லாந்து சுதந்திர தேசிய விடுதலையை வேண்டி 1905ல் தொடங்கப்பட்டது. அயர்லாந்து அரசியல் கட்சி. அது அயர்லாந்தில் 1918 தேர்தலில் ஐரிஷ் சிம்பெயின் பெரிய வெற்றியை பெற்றதன் பின்னர் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் செல்ல மறுத்து தாங்களே தமக்கான தேசிய சபையை ஒன்றை 21 ஜனவரி 1919ல் “டெயில் எய்ரன்”(Dáil Éireann) என்ற பெயரில் அமைத்தனர்.
அரசியல் வழிமுறை
டெயில் எய்ரன் என்பது ஐரிஷ் மொழிச் சொல்லாகும். "டெயில்" (Dáil) என்றால் சபை அல்லது கூட்டம் என்றும், "எய்ரன்" (Éireann) என்றால் "அயர்லாந்தின்" என்றும் பொருள்படும். டப்ளினில் முதன்முதலாக கூடிய இச்சபை, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இருந்து பிரிந்து அயர்லாந்தின் சுயாட்சியை நிலைநாட்ட முயன்ற புரட்சிகர நாடாளுமன்றமாகும். இது “Irish Assembly என்பது அயர்லாந்தின் Parliament” எனவும் அக்காலத்தில் கருதப்பட்டது. இதன் தலைவர்களில் ஒருவரான Éamon de Valera பின்னர் முக்கிய தேசியத் தலைவரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அயர்லாந்து முன்னுதாரணத்திலிருந்து ஈழத்தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும் நிறையவே உள்ளது. இவ்வாறே 1920ல் ஒட்டோமன் பேரரசு வீழ்ச்சிக்குப் பின்னர் துருக்கிய தேசிய சபை (Turkish National Assembly) உருவாக்கப்பட்டது அதுவே Grand National Assembly of Turkey என்னும் துருக்கி நாட்டின் சட்டமன்றம் உருவானது.

இத்தகைய உலகளாவிய வரலாற்று உதாரணங்களிலிருந்து ஈழத்தமிழர் தமக்கான அரசியல் வழிமுறைகளை இன்றைய சூழலுக்கும், தாயக இருப்பு நிலையிலிருந்தும் தேடுவதும், பின்பற்றுவதும் அவசியமாகும். இத்தகைய உலகளாவிய முன்னுதாரணங்களின் படிப்பினைகளில் இருந்து பாடங்களைக் கற்று அதனடிப்படையிலே தமிழ் மக்களுக்கான விடுதலை நோக்கிய பயணத்திற்கு அனைத்து தமிழ் தரப்பையும் உள்ளடக்கிய ஒரு பொதுச் சபை உருவாக்கப்பட வேண்டும்.
அந்தப் பொதுச் சபையின் வழிநடத்தலில் ஒரு அறிவியல் ஆய்வுமையம் அமைக்கப்படுவது அவசியமானது. அத்தகைய ஒரு அறிவியல் ஆய்வு மையத்தினால் மட்டுமே தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசையை வென்றெடுப்பதற்கான கொள்கைத் திட்டம்(Manifesto) ஒன்றை வரைய முடியும். அந்தக் கொள்கை திட்டத்தை "தமிழீழக் கொள்கைத் திட்டம்"(Tamil Eelam Manifesto) என்று அழைப்பதே பொருத்தமானது. இத்தகைய கொள்கை திட்டம் என்பது எவ்வாறு? எவற்றையெல்லாம் உள்ளடக்கியவாறு வரையப்பட வேண்டும் என்பது இங்கே முக்கியமானது. சரியான கொள்கைத்திட்டமிடலின்றி வெற்றியை நெருங்க முடியாது.
வெறும் மனவிருப்பங்களினாலும், ஆசைகளினாலும், வீரதீர பிரகடனங்களினாலும் கற்பனையில் மட்டுமே பெரும் கோட்டை கொத்தளங்களை மாளிகைகளை கட்ட முடியும். ஆனால் நடைமுறையில் எம்மிடம் என்ன இருக்கின்றதோ அதனை வைத்துக் கொண்டுதான் எதனையும் சாதிக்க முடியும்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தளவில் உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் போக்கு என்ன? பிராந்தியத்தின் அரசியல் சூழமை என்ன? தமிழ் மக்களின் இருப்பு நிலை என்ன? என்பவற்றை உள்ளடக்கியதாகவே அறிவார்ந்து நடைமுறையில் தமிழ் மக்களின் தேசிய அபிலாசை பூர்த்தி செய்வதற்கான வழியை தேட வேண்டும், வகுக்க வேண்டும்.
அறிவே இன்றைய மனித வாழ்வுக்கும் இருப்பிற்குமான அரணாகும். இன்றைய மனித நடத்தை அனைத்தும் அறிவில்தான் தங்கியிருக்கிறது. தமிழரின் விடுதலைக்கான முன்வரைவும் அறிவிற்தான் ஆரம்பமாகிறது. விடுதலைக்கான அடித்தமும் அறிவிற்தான் தளமிடுகிறது. விடுதலைக்கான கட்டுமானமும் அறிவாற்தான் நிமிர்ந்து எழுகிறது. மொத்தத்தில் அறிவே அனைத்திற்குமான மையப்புள்ளி. அறிவே ஆக்கத்திற்கான ஊற்று. விடுதலைக்காக அனைத்துவகை பூட்டுக்களையும் திறக்கவல்ல முதன்மைத் திறவுகோல் (Masterkey) அறிவுதான்.
ராஜதந்திர பாரம்பரியம்
அரசியல் என்பது சந்தர்ப்பங்களை சாதகமாக்கி சாத்தியக் கூறுகளை சாதகமாக கையாளும் கலையாகும். சாத்தியக் கூறுகளை கண்டறிந்து சாத்தியப்பாடுகளை சரிவர கையாண்டு அவற்றிற்கு ஏற்ப விடுதலைக்கான வழி வகையை அறிவியல் பூர்வமாக வகுப்பதிலேயே விடுதலை சாத்தியப்படும். அரசு ஒரு நிறுவனம். அது நிறுவனங்களுக்கு எல்லாம் தாய் நிறுவனமாகும். அதற்கு சகோதர நிறுவனங்களென வெளியரசுகளும், சேய் நிறுவனங்களென உள்ளக அரச திணைக்களங்களும், கட்டுமானங்களும் உள்ளன. ஆதலால் தமிழினத்தை ஒடுக்கும் சிங்கள அரச நிறுவனத்திற்கென அறிவார்ந்த செயல்த்திறனுள்ள நிறுவனங்களின் நேரடி, உடனடி, நீண்டகால அடிப்படையிலான பங்கும் பாத்திரமும் வகிக்கும். அரசு என்பது ஒரு ஒடுக்குமுறை நிறுவனம்.
அதனை எதிர்ப்பவர்களை அது ஈவிரக்கமின்றி அடக்கி ஒடுக்கும், படுகொலை செய்யும். அதனால்த்தான் ""அரசு என்ற நிறுவனம் சுழல்வதற்கு இரத்தம் பாச்சப்படவேண்டும்"" என்கிறார் மாக்கியவல்லி. எனவே இத்தகைய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை முறைமைக்குள்ளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் சிங்கள பௌத்த அரசை அரசற்ற தமிழினம் எதிர்கொள்ள வேண்டுமாக இருந்தால் அது முற்றிலும் அறிவார்ந்த ரீதியில் எதிர்கொள்ள வேண்டும்.

அறிவார்ந்த ராஜதந்திர பாரம்பரியத்ததை தொடர்ச்சி குன்றாமல் பேணுகின்ற பௌத்த சிங்கள அரச நிறுவனத்திற்கு அடிப்படையில் அறிவார்ந்த அணுகுமுறைக்கான பல்வகை நிறுவனங்கள் இயல்பாக உள்ளன. இந்நிலையில் ஆட்சியாளரின் தீர்மானங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் அறிஞர்களின் பங்களிப்பு எப்போதும் தயார்நிலையில் வீரியமாய் இருக்கும்.
தமிழர்களை ஒடுக்குவதற்கு சிங்கள அரசினுடைய சகோதர நிறுவனங்களும், சேய் நிறுவனங்களும் ஒன்றை ஒன்று தாங்கி வழிநடத்தும், ஒன்றுக்கொன்று துணைநிற்கும், ஒன்றை இன்னொன்று பாதுகாத்து இழுத்துச் செல்லும். இதனால் அறிவார்ந்த கூட்டு வளர்ச்சியும், செயற்திறனும் சிங்கள அரசநிறுவன அமைப்பு முறையில் உண்டு. இந்த வளர்போக்கு அரசற்ற ஈழத்தமிழருக்கு கிடைக்க வாய்ப்பில்லை.
ஈழத்தமிழர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு ரீதியான அரச நிறுவன துணையுமில்லை. ஆயினும் இதனை உணர்வுபூர்வமான அறிவார்ந்த அணுகுமுறைகள் மூலம் திட்டமிட்ட அறிவுசார் அமைப்புகள் மூலம் இவ்விடைவெளியை நிரப்பி முன்னேற வேண்டும். ஈழத்தமிழரின் காலனித்துவகால அரசியல் முன்னெடுப்புக்களிலும் சரி, சுதந்திர இலங்கையின் சிங்களத் தலைவர்களுடனான அரசியல் பேரம் பேசல்களிலும், ஒப்பந்தங்களிலும் சரி தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்திலும் சரி அரசறிவியல் அறிஞர்களின் பங்களிப்பு அரிதாகவே இருந்துள்ளது.
தமிழ்ச் சமூகத்திடம் ஏற்கனவே இருந்த குடியேற்றவாத ஆட்சிக்கால கருத்துமண்டலம் வேலைவாய்ப்பு, உத்தியோகநலன் என்பன அரச மற்றும் அரசுசார் நிறுவனம் சார்ந்தே இருந்தமையால் மத்தியத்தர வர்க்கத்தில் எழத்தக்க அறிஞர்கள் அரச உத்தியோகத்தர்களாக தனிநலன் சார்ந்து பொது நலனையோ இன நலனையோ கருத்தில் எடுக்காமல் மௌனமாக இருந்து விட்டனர் என்பது கசப்பான உண்மையாகும்.
உள்நாட்டு பிராந்திய நிலைமை
இத்தகைய அந்நியர்களால் புகுத்தப்பட்ட கருத்து மண்டலமே தமிழ் அறிஞர்களை தமது இனத்துக்கான பங்களிப்பை ஆற்றமுடியாமல் கருவிலேயே அழித்தொழித்துவிட்டது. சுமார் மூன்று நூற்றாண்டுகள் காலனித்துவத்திடமும், சுமார் ஒரு நூற்றாண்டு சிங்கள தேசிய இனத்திடமும் இழந்துபோன இறைமையை மீட்பதற்கான தொடர் போராட்டங்களில் எதனையுமே பெறமுடியாமல் நாம் பெற்ற நீண்ட தொடர் தோல்விகளிலும், படிப்பினைகளிலும் இருந்து நாம் கற்றுக் கொண்டவைகளை முன்நிறுத்தி விடுதலைக்கான அறிவார்ந்த கொள்கை திட்ட வரைபை உடனடியாக வரைய வேண்டும்.

அது இன்றைய 21ஆம் நூற்றாண்டின் பூகோள, புவிசார் அரசியல் யதார்த்தத்திற்கும், உள்நாட்டு பிராந்திய நிலைமைகளுக்கும், புலம்பெயர் நிலைமைகளுக்கும் பொருத்தமான வகையில் நடைமுறை சார்ந்து அனைத்தையும் உள்ளடக்கிய தமிழீழக் கொள்கைத் திட்டம் (Tamil Eelam Manifesto ) அவசியமானது. அத்தகைய தமிழீழக் கொள்கைத்திட்ட வரைபு ஈழத் தமிழர் இழந்துபோன இறைமையை மீட்பதற்கான சவால்கள் என்ன? இன்றைய தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பிரச்சனைகள் எவை? என்பதைப் பற்றி விஞ்ஞானபூர்வமாக ஆய்வுக்கு உட்படுத்தி பிரச்சனைகள் இனம் காண்பதற்கான நடைமுறை செயற்திட்டம் விளக்கப்பட வேண்டும்.
இலங்கைத் தீவின் 74 % சிங்கள சனத்தொகையைக் கொண்ட சிங்கள பௌத்த இன ஒடுக்குமுறை அரசுடன் போராடி ஈழத் தமிழர்கள் இன ஒடுக்கு முறையிலிருந்து விடுதலை பெறுவதற்காக போராட வேண்டிய அதேவேளை மறுபுறம் புவிசார் அரசியல் சிக்கலில் இருந்து மீள்வதற்கான புவிசார் அரசியல் வியூகத்தில் இந்தியா சார்ந்தும், இந்து சமுத்திர அரசியல் சார்ந்தும் வல்லரசுகள் சார்ந்ததுமான அணுகுமுறையை மிகக் கவனமாக கையாளவேண்டியும் உள்ளது.
மேற்குலகம் பிராந்தியம் என்ற இரண்டு நிலைமைகளில் இருதலை கொள்ளி நிலை எப்போதும் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து பயணிக்கிறது. இதுவே ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான போராட்டதில் காணப்படும் தலையாய பிரச்சனையாகும். ஈழத் தமிழரின் தாயக நிலம் ஒன்றுமில்லாத அளவு கேந்திர ஸ்தானத்தை பெறுகின்ற போதிலும் அந்தக் கேந்திரத்தானமே வரமாகவும் சாபமாகவும் அமைந்து காணப்படுகிறது.
கலை கலாசார வடிவங்கள்
விடுதலைக்கான அனைத்துச் சாத்தியங்களைக் கொண்டிருந்த போதிலும் இத்தகைய சிக்கல் வாய்ந்த நிலமையில் விடுதலைக்கான போராட்டத்தை மிகவும் புத்திபூர்வமாகவும் நடைமுறை சாத்தியப்பாட்டுக்கு ஏற்பவும் உயர்ந்த பட்ச நலனை பெறக்கூடிய வகையிலும் கொள்கை திட்டமிடல் இடம்பெற வேண்டும். ஈழப்போராட்ட வரலாற்றுப் பின்னணி அதன் தொடர் விளைவுகள் பிராந்தியத்திலும் சர்வதேசத்திலும் ஏற்படுத்தியிருக்கின்ற தாக்கங்கள் அவற்றை களைவதற்கு மீள் ஒழுங்குபடுத்தலுக்குமான வழிவகைகள் பற்றிய ஆய்வும், அவற்றை சீர்வு செய்வதற்கான நடைமுறை சார்ந்த செயற்பாடு திட்டங்கள் பற்றியும் அதிக கவனம் செலுத்தி அவை பற்றி தெளிவு வரையறுக்கப்பட வேண்டியது அவசியமானது.
இலங்கை தீவின் தேசிய இன ஒடுக்குமுறையின் வடிவங்களும், வகைகளும் பற்றிய தெளிவான பார்வையும் ஆய்வும் அதற்கான நடைமுறை சார்ந்த தக்கபூர்வமான முடிவுகளையும் வரையறை செய்வதாக இந்த மூன்றாமத் அத்தியாயம் அமைய வேண்டும். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் பல்வகை ஒடுக்குமுறை வடிவங்கள் பற்றிய அணுகுமுறை உதாரணமாக மொழி ஒடுக்குமுறை, குடியேற்றம், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், நீதி நிர்வாக ஏற்பாடுகள், இனவன்முறை வடிவங்கள், போலீஸ்-இராணுவ புலனாய்வு விசாரணை ஒடுக்குமுறை, பொய்யான திரிபடுத்தப்பட்டவரலாறு, மற்றும் கருத்தியல் வடிவங்கள், கலை கலாசார வடிவங்கள் எனப் பலவகை ஒடுக்குமுறைகளையும் அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட வேண்டும்.
மற்றும் சிங்களத் தலைவர்களின் மதியுகமும், இராஜதந்திர வியூகங்களும் தமிழ் தலைமைகளை ஏமாற்றிய விதங்கள் பற்றி அலசப்பட வேண்டும். அதே நேரம் சிங்களத் தலைவர்களதும், சிங்கள அரசியல் கட்சிகளினதும், பௌத்த நிறுவனங்களினதும், பிக்குகளினதும் பங்கும் பாத்திரமும் இவர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் முன்மொழிவுகளும் அவசியமானது.
அடுத்து ஈழத்தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளும், அவ்வப்போது காணப்பட்ட அரசியல் யதார்த்தங்களும் இன ஒடுக்கு முறைக்கு எதிரான அன்றைய கால போராட்ட முறைகள் இன்றைய தமிழ் அரசியல் தலைமைகளின் தோல்விகளும், படிப்பினைகளும் பற்றி தத்துவத்த ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் ஆயப்பட்டு இன்றை அரசியல் போக்கிற்கு ஏற்ற வகையில் முடிவுகளை எடுக்கக்கூடிய அர்ப்பணிப்பும் பதவி மோகமுமற்ற, செயலுக்கம் மிக்கவர்களைக் கொண்டஒரு தமிழ்த்தேசிய சபையால் மட்டுமே ஈழத்தமிழர் விடுதலைக்கான பயணப்பாதையை வழிநடத்த முடியும். ஒன்றுபட்டால் மட்டுமே ஈழத்தமிழருக்கு வாழ்வு.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 27 February, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam