வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
பாதாள உலகக் குழு உறுப்பினர் பொடி லஸ்ஸி எனப்படும் ஜனித் மதுசங்கவை, 7 நாட்கள் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று (27) பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இரண்டாம் இணைப்பு
பாதாள உலகக் குழு உறுப்பினரும் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான 'பொடி லஸ்ஸி' எனப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வா, இன்று(27.02.2026) அதிகாலை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அதிகாலை 05.55 மணியளவில் மும்பையிலிருந்து வருகை தந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL - 142 விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விசேட பொலிஸ் குழுவினரால் பொறுப்பேற்கப்பட்ட அவர், பலத்த பாதுகாப்புடன் மேலதிக விசாரணைகளுக்காக எல்பிட்டிய பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக தகவல் - ராகேஷ்
முதலாம் இணைப்பு
இந்தியாவில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் பொடி லெசி இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட பொடி லெசிவை நேற்றைய தினம் இலங்கைக்கு அழைத்து வர முன்னதாக திட்டமிடப்பட்டிருந்ததாகவும் பின்னர் சட்டப் பிரச்சினைகளினால் நேற்றைய தினம் அழைத்து வரப்படப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தப்பி சென்றவர்..
பொடி லெசி என்பவரை அழைத்து வரும் நோக்கில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் நேற்று முன்தினம் இந்தியா சென்றுள்ளனர்.

தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு மனித படுகொலைகள், கப்பம் கோரல்கள், போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த குறித்த பாதாள உலகக் குழு உறுப்பினர் 12 ஆண்டுகளுக்கு முன்னர் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொடி லெஸி என்பவர் பிணை கிடைத்த நாளிலேயே இவ்வாறு இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக விசாரணகைளின் மூலம் தெரியவந்துள்ளது.