இளைஞர்களுக்கு பேராபத்தாக மாறியுள்ள கிறீம்கள் : வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் எட்டுக்கும் மேற்பட்ட வகையான சருமத்தை வெண்மையாக்கும் அழகுசாதனப் பொருட்கள் கிடைப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதனை பாவிக்கும் பல இளைஞர்கள் புற்றுநோயிற்கு முகங்கொடுக்க வேண்டிய ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை முறையாக ஒழுங்குபடுத்த மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தவறியமையே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மனித உடலுக்கு தீங்கு
உலக சுகாதார அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட தரத்திற்கமைய, பொருட்களில் அதிகபட்ச பாதரச அளவு ஒரு மில்லியனுக்கு ஒரு பங்கு என்றாலும், சந்தையில் கிடைக்கும் பல அழகுசாதனப் பொருட்களில் இந்த அளவு ஒரு மில்லியனுக்கு 10,000 அல்லது 20,000 என்ற அளவில் உள்ளது.
எனவே, இந்த அழகுசாதனப் பொருட்களில் பலவற்றில் தேவையான தரநிலை இல்லாததால், இளைஞர்கள் நிறமாற்றம் ஏற்படும் அபாயத்தில் உள்ளனர்.
சந்தையில் இதுபோன்ற தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் இருப்பதால், அழகுசாதனத் துறையில் ஈடுபட்டுள்ள அழகுசாதன நிபுணர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
2015ஆம் ஆண்டு மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையச் சட்டத்தின் கீழ் நாட்டில் வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டப்பூர்வ உரிமை நீக்கப்பட்டது.
இதன் மூலம், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கன உலோகங்களைக் கொண்ட பல கிரீம்கள் நாடு முழுவதும் கடைகளிலும் ஒன்லைனிலும் விற்பனை செய்யப்படுவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
பல அழகுக்கலை நிபுணர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், மற்றும் பல தகுதியற்றவர்கள் தற்போது இந்த வெண்மையாக்கும் கிரீம்களை சுயதொழிலாக தயாரித்து விற்பனை செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



