முல்லைத்தீவில் இராணுவத்தின் முடிவே நடைமுறை; ஊடகவியலாளர்களை திருப்பிய பொலிஸார்
முல்லைத்தீவு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளரின் அறிவித்தலுக்கு அமைய முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றினை செய்தி அறிக்கையிட முள்ளியவளை பகுதியிலிருந்து சென்ற ஊடகவியலாளர் சிலர் படையினரின் வீதி சோதனை நிலையங்களில் தன்னை அடையாளப்படுத்திச் சென்ற போதும் மூன்றாம் கட்டை பகுதியில் உள்ள படையினரின் வீதி சோதனை நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
தான் ஊடகவியலாளர் மாவட்ட செயலகத்தின் அறிவித்தலுக்கு அமையச் செய்தி சேகரிக்கச் செல்வதாகப் படையினருக்குத் தெரிவித்த போதும் படையினர் ஊடகவியலாளர் முல்லைத்தீவு நோக்கிச் செல்வதற்கான அனுமதியினை மறுத்துள்ளதுடன், அதிகாரியிடம் கேட்டுவிட்டுச் சொல்வதாகக் கூறினார்கள்.
குறித்த வீதி சோதனை நிலையத்தில் முள்ளியவளை பொலிஸாரும் கடமையில் நின்றுள்ளார்கள்.
அவர்களிடம் ஊடகவியலாளர் அடையாளப்படுத்தியபோதும் படையினர்கள் என்ன சொல்கின்றார்களோ அதுதான் இங்கு என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
குறித்த வீதி ஊடாக அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஏனையவர்கள் தங்களை அடையாளப்படுத்திச் சென்று வந்துள்ள நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
சற்று நேரம் கழித்து அதிகாரியுடன் பேசிய அங்கு கடமையில் நின்ற படையினர், ஊடகவியலாளர் செல்வதற்கு அனுமதி இல்லை என்றும் இதனை பொலிஸார் ஊடகவியலாளருக்குச் சொல்லுமாறும் அறிவித்துள்ளார்கள்.
கடமையில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளருக்கு நிலைமையினை எடுத்துரைத்த ஊடாவியலாளர் அவர் இராணுவ அதிகாரிக்குத் தெரியப்படுத்துவதாகக் கூறியுள்ளதைத் தொடர்ந்து 01 மணி நேரமாகக் காத்திருந்த ஊடகவியலாளர் பணி செய்யமுடியாத நிலையில் வீடு திரும்பியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் இணைந்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினருக்கு கோவிட் நோயாளர்களுக்கான ஒருதொகுதி சுகாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ள நிகழ்விற்குச் சென்ற ஊடகவியலாளருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள
நிலையில் ஊடகவியலாளர்கள் தங்களை அடையாளப்படுத்தி செய்தி சேகரிக்கச் சென்றாலும்
சில பகுதிகளில் அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
