வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கோவிட் சிகிச்சை நிலையமாக மாறுகிறது!
நாட்டில் கோவிட் -19 மூன்றாம் அலையின் தாக்கமானது வேகமாக அதிகரித்து வரும்
நிலையில், நாடு பூராகவும் 8000 நோயாளர்கள் சிகிச்சை பெறத்தக்க வகையில், கோவிட்
சிகிச்சை மையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவிட் செயலணியின்
தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் கோவிட் தொற்றாளர்களை தங்க வைத்து சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று இடம்பெற்று வருகின்றன.
100 கட்டில்களைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள குறித்த சிகிச்சை நிலையத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் கோவிட் சிகிச்சை நிலையத்தை அமைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று (06.05) பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் இராணுவ அதிகாரிகள் மற்றும் மாவட்ட உயர் மட்ட அதிகாரிகள் ஆகியோரும் பங்குபற்றியிருந்ததுடன், கோவிட் சிகிச்சையளிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், நோயாளருக்குத் தேவையான மேலதிக மலசலக் கூடங்களை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பொருளாதார நிலையம் அமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்த
நிலையிலும் இன்னும் பாவனைக்குத் திறக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.






