அமெரிக்க இடைக்காலத் தேர்தல்: ட்ரம்ப் விடுத்த கோரிக்கையால் விவாதம்
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலைத் தனக்கான ஒரு மக்கள் தீர்ப்பாகக் கருதி வாக்களிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த வேண்டுகோள், குடியரசுக் கட்சியினரிடையே புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸின் டலஸ் நகரில் நடைபெற்ற கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய ட்ரம்ப், "நானே தேர்தலில் போட்டியிடுவதாக நினைத்து வாக்களியுங்கள்" என ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
எனினும், ட்ரம்ப்பை முதன்மைப்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த தேர்தல் உத்தி தொடர்பில் மாநாட்டில் கலந்துகொண்ட தீவிர ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் சிலர் தமது கவலையை வெளியிடுகின்றனர்.
பொருளாதார நெருக்கடி
அமெரிக்காவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், சுயாதீன வாக்காளர்களை ஈர்ப்பதில் ட்ரம்ப் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி ஜனாதிபதி ட்ரம்பின் மக்கள் ஆதரவு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், தீவிரக் கட்சி ஆதரவாளர்களைத் திரட்டுவதற்கு ட்ரம்ப் அவசியமானவர் என்ற போதிலும், கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் இந்த உத்தி எந்தளவுக்குப் பலனளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, தேர்தல் வெற்றி பெற்றால் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5,000 டொலர் "ட்ரம்ப் ஈவுத்தொகை" வழங்கப்படும் என அறிவித்த ட்ரம்ப், விலைவாசி உயர்வு குறித்த வாக்காளர்களின் உடனடிக் கவலைகளுக்குத் தெளிவான தீர்வுகளை முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.