இலங்கையில் இராணுவத்தினரை வரவழைத்தமை குறித்து அமெரிக்கா அதிருப்தி!
கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் அதேவேளையில், இலங்கையில் இராணுவத்தினரை சேவைக்கு அழைத்தமை குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
அமைதியான எதிர்ப்பாளர்கள் இராணுவ மற்றும் குடியியல் தரப்பின் வன்முறை அல்லது அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை பேச்சாளர் நெட் பிரைஸ் செவ்வாயன்று இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து அமெரிக்கா கவலையடைகிறது.
இந்தநிலையில் வன்;முறைச் செயல்களைத் தூண்டும் மற்றும் ஈடுபடும் எவரையும் கைது செய்து வழக்குத் தொடருமாறு பேசசாளர் வலியுறுத்தியுள்ளார்
அமெரிக்கா, இலங்கை துருப்புக்களின் நிலைப்பாட்டை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
அத்துடன்; பிரதமர் பதவிவிலகியப் பின்னர் இலங்கையில் நிலவும் அரசியல் நகர்வுகள் குறித்தும் அமெரிக்கா கவனித்துக்கொண்டிருக்கிறது என்றும்; நெட் பிரைஸ் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் மற்றும் அரசியல் தலைவர்கள் விரைந்து செயற்படுமாறும் இலங்கையில் நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான தீர்வுகளை இனங்கண்டு அமுல்படுத்த ஒன்றிணைந்து செயற்படுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
மின்சாரம், உணவு, மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக இலங்கை மக்களின் அதிருப்தி மற்றும் அவர்களின் நாட்டின் அரசியல் எதிர்காலம் குறித்த கவலைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்கவேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை பேச்சாளர் நெட் பிரைஸ் வலியுறுத்தியுள்ளார்.