மலையக மக்கள் ஒரு வேளை உணவுக்கும் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது: சர்வமத தலைவர்கள் கூட்டாக தெரிவிப்பு (Video)
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த குழப்பநிலை காரணமாக மலையக மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் மலையக மக்கள் ஒரு வேளை உணவுக்கும் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது என சர்வமத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
கரித்தாஸ் கண்டி செட்டிக் நிறுவனத்தின் பெருந்தோட்ட பிரிவு இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஹட்டன் நகரத்தின் சர்மத தலைவர்களான ஹட்டன் நீக்ரோதாராம விகாரைதிபதி மாகம விமலதர்ம தேரர், ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தின் பங்கு தந்தை நீயுமேன் பீரிஸ், அகில இலங்கை இந்து மகா சங்க தலைவர் தேசகீர்த்தி சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா, அகில இலங்கை ஜமைத் உலமாவின் ஹட்டன் கிளையின் உபதலைவர் மௌவி எம்.எஸ்.எம் ஹீசைன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மலைநாட்டிற்கு வந்து 200 வருடங்கள் ஆகும். இந்நிலையிலும் அவர்களின் சம்பள உயர்வு, வாழ்க்கைத் தரம், கல்வி என அனைத்துமே அடி மட்டத்தில்தான் உள்ளது. இந்நிலையில் தற்போதைய நிலை அவர்களை முற்றாக முடக்கி வாழ முடியாததாகியுள்ளது.
கடந்த 72 வருடங்களாக எம் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் நாட்டை நேசிக்கும் தலைவர்களை உருவாக்காமையே இன்றைய நாட்டின் சாபக்கேட்டிற்குக் காரணமாகும். இதன் பிறகாவது நாம் நாட்டையும் மக்களையும் நேசிக்கும் அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்யும் மன நிலையை உருவாக்கிட வேண்டும்.
இலங்கைக்கு அந்நிய செலாவணியைத் தேடித் தருவது இந்த தேயிலை ஏற்றுமதியே, ஆனால் எமது மலையக மக்கள் ஒரு வேலை உணவைப் பெற்று கொள்வதும் மிகவும் துன்பகரமானதாக காணப்படுகின்றது. இந்நிலைக்குக் காரணமான ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இவர்களுக்கு இசைபாடிய 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் வெறுக்கின்றனர்.
மலையக மக்களின் இன்றைய நிலைக்கு முற்று முழுதான காரணம் மலையகத்தில் இருக்கும் முதுகெலும்பு இல்லாத அரசியல்வாதிகளே.
கட்சி சார்ந்த தன்னுடைய சுயநல அரசியலை முன்னெடுத்ததால்தான். 200 வருடங்களாக அந்நிய செலாவணியை ஈட்டிக் கொடுத்தும் எமது மக்கள் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு பட்டினி சாவை எதிர் கொண்டு உள்ளமைக்கு இந்த அரசியல்வாதிகளே காரணமாகியுள்ளனர்.
இன்றைய மலையக தாய்மார்கள் அதிகமான நேரம் தேயிலை மலைகளில் கொழுந்து கொய்யும் தொழிலேயே கஷ்டப்படுகின்றார்கள். காலை மற்றும் இரவு ரொட்டி சாப்பிட்டு இடையில் தேநீர் அருந்தி தமது தொழிலை முன்னெடுக்கின்றார்கள்.
மலையக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க
வேண்டும். நாமும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பைப் பெற்றுத் தரக் கடமைப்பட்டுள்ளோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.