கோதுமை மாவை மானிய விலையில் வழங்க வேண்டும் : மக்கள் விடுக்கும் கோரிக்கை
தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி கோதுமை மாவை மானிய விலையில் வழங்குவதற்கும், நிவாரணம் வழங்குவதற்கும், பொருட்களின் விலைவாசியை அதிகரிக்காமல் இருப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இச் சூழ்நிலையில் திடீரென 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம் மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.
ஒரு தொழிலாளியின் வீட்டில் ஒரு நாளுக்கு 3 அல்லது 5 கிலோ வரை கோதுமை மாவை தனது உணவிற்காக பயன்படுத்துகின்றார்கள்.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பின் காரணமாக கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் அனைத்து பேக்கரி உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் குறைந்த சம்பளம் பெரும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தற்போது அதிகரிக்கப்பட்ட மாவின் விலை காரணமாக தாங்கள் மேலும் மேலும் பொருளாதார சுமைக்கு தள்ளப்படுவதாகவும், பொருட்களின் விலை அதிகரிப்பு ஈடுகொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.




