பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய ஐ.நா. பிரதிநிதியிடம் கோரிக்கை!
பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்யும் நடவடிக்கை தொடர்பில், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதிக்கும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர், மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜாட்சன் பிகிராடோவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு நேற்று(23.03.2026) இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி யின் வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக, சிவில் சமூக அமைப்புகளின் பிரதி நிதிகளுடன் விசேட சந்திப்பு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் IOM அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
PTA சட்டத்தை ரத்து செய்வதாக உறுதி
இதேவேளை, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் சார்பில் அதன் தலைவர் ஜே. யாட்சன் பிகிறாடோ கலந்து கொண்டார்.
இதன்போது இலங்கையில் 1979 ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டம் (PTA), 1982 ஆம் ஆண்டு நிரந்தர சட்டமாக மாற்றப்பட்டது.

இந்த சட்டம் தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் மலையக மக்களையும் உள்ளடக்கிய பல்வேறு சமூகங்களுக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலங்களில் PTA சட்டத்தை ரத்து செய்வதாக உறுதி அளித்திருந்த போதிலும், அது இன்னும் நடைமுறையில் உள்ளது. அதற்கு மாற்றாக கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு மசோதா மற்றும் பயங்கரவாத தடுப்பு மசோதா போன்ற சட்ட முன்மொழிவுகளும் இதுவரை சட்டம் ஆக்கப்படவில்லை.
இந்நிலையில், புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள (PSTA) குறித்தும் கவலை வெளியிடப்பட்டது. 2026 பிப்ரவரி 28ஆம் தேதி வரை பொது மக்களின் கருத்துகளை பெறுவதற்காக நீதியமைச்சு அறிவித்திருந்தது. பல்வேறு தரப்பினரும் இந்த சட்டம் PTA-வை விடவும் கடுமையான விதிகளை கொண்டுள்ளதாகவும், தேவையற்றதாகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதற்கு எதிராக போராட்டங்கள், பொதுமக்கள் கருத்து சேகரிப்புகள் மற்றும் தபால் அட்டை பிரச்சாரங்கள் போன்றவை முன்னெடுக்கப்பட்டன.
பிற மாவட்டங்களில் இல்லாத கட்டுபாடு
இந்த சட்ட முன்வரைவுகள், ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை மேற்கொண்டுள்ள உடன்படிக்கைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ மனித உரிமை நிபந்தனைகளுடன் பொருந்தவில்லை என்பதும் வலியுறுத்தப்பட்டது. எனவே, இவ்வகை சட்டங்களை உடனடியாக நிறுத்தி, பயங்கரவாத தடுப்பு சட்டத்தையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, ஐ.நா. பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் மாவட்டத்தின் பிரதான நுழைவாயிலான மன்னார் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி குறித்தும் கவலை வெளியிடப்பட்டது.

இந்த சோதனைச் சாவடி மாவட்டத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் மக்களை சோதனைக்கு உட்படுத்துகிறது. இலங்கையின் பிற மாவட்டங்களில் இல்லாத தனித்துவமான கட்டுப்பாடாக உள்ளது. மன்னார் மக்களை தனித்துவமாக கண்காணிக்கப்படுகின்றதாக உணர்கின்றனர். இதனால், இது அடிப்படை மனித உரிமை மீறலாக கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளுக்கு கையளிப்பு
அத்துடன், மன்னார் பாலத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற சோதனைச் சாவடி மனித உரிமை மீறலான செயற்பாடு என்பது வலியுறுத்தி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இந்த விடயம் இதுவரைக்கும் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

மேற்கண்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய அறிக்கை, மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) சார்பில், பொதுமக்களுடன் நடத்திய கலந்துரையாடல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு, ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.