இங்கிலாந்து - அமெரிக்க இராணுவ தளங்களை உளவு பார்க்க இலங்கையை பயன்படுத்தும் சீனா...!
இந்தியப் பெருங்கடலில் உள்ள இங்கிலாந்து மற்றும் அமெரிக்க இராணுவ தளங்களை உளவு பார்க்கும் வகையில் புதிய ராடார் தளத்தை இலங்கையில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த தகவலைப் பிரித்தானிய இணைத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இலங்கை உளவுத்துறை தரப்புக்களால் வெளிப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பீய்ஜிங், இலங்கைக்கு வழங்கிய தமது கடன்களை மூலோபாய ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டுவதாக நிபுணர்களைக் கோடிட்டுக் குறித்த இணைத்தளம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க - பிரித்தானிய இராணுவம்
தொலைதூர செயற்கைக்கோள் பெறும் தரை நிலையத்திற்கான இந்த திட்டமிடல், சீன அறிவியல் கல்லூரியின் ஏரோஸ்பேஸ் தகவல் ஆராய்ச்சியால் வழிநடத்தப்படுகிறது. இதன்படி, குறித்த நிலையம், ருஹுனு தெற்கு முனையில் டோண்ட்ரா விரிகுடாவிற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் அமைக்கப்படும் என்று இணைத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இது, இந்தியப் பெருங்கடலில் மேற்கத்தியக் கடற்படைக் கப்பல்களுக்கு எதிரான உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கும் உதவும். அத்துடன், டியாகோ கார்சியாவில் உள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராணுவ நிறுவல்களையும், இந்தியாவையும் உளவு பார்க்க சீனாவுக்கு வழியேற்படுத்தப்படும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்தியாவின் விண்வெளித் தளம், ஒடிசாவில் உள்ள அதன் ஏவுகணை சோதனைத் தளம் மற்றும் பகுதியில் உள்ள பல இராணுவ வசதிகள் அனைத்தும் இந்த ராடார் கண்காணிப்புக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இராணுவ தன்மையை மறைக்கும் சீனா
சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் சுற்றுப்பாதை ஏவுகணை வீதம் வியத்தகு அளவில் உயர்ந்துள்ளது, இதன்படி, இந்த ஆண்டு சீனா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் 200க்கும் மேற்பட்ட விண்கலங்களைச் சுமந்து கொண்டு 60க்கும் மேற்பட்ட விண் ஏவுதல்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
இதேவேளை, சீனாவின் ராடார் தளத்தைக் கட்டியெழுப்பச் சீனாவை அனுமதிப்பது, சீனாவின் கடனை மறுசீரமைப்பதற்கான விலையின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று லண்டன் கிங்ஸ் கொலோஜின் பேராசிரியர் எலீஸியோ பட்டலானோ கூறியுள்ளார்.
மேலும், மூலோபாய ஆதாயத்திற்காக பீய்ஜிங் தமது கடனைப் பயன்படுத்துவதற்கான முதல் உதாரணம் இலங்கை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற தளங்களின் இராணுவ தன்மையை மறைக்கச் சீனா தன்னால் முடிந்த அனைத்தையும்
செய்கிறது என்றும் பேராசிரியர் படலானோ தெரிவித்துள்ளார்.