பண்டாரவளையில் பயங்கரம்! கல்குவாரி மண்சரிவில் தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி
பதுளை - பண்டாரவளை பிரதேசத்திலுள்ள கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட மண்சரிவில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரச் சம்பவம் இன்று(14.02.2026) இடம்பெற்றுள்ளது.
விபத்து
பண்டாரவளை - பூனாகலை வீதியில் 16 - 17 ஆம் கிலோமீற்றர் கம்பங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள 'லியங்கஹவல, மாபிடிய' கல்குவாரியிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குறித்த குவாரியில் இன்று(14) காலை பாறைகளைத் துளையிடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மேலதிக மண் மற்றும் கற்கள் சரிந்து விழுந்துள்ளன.
சடலங்களை மீட்கும் பணி
இந்தச் சரிவில் சிக்கிய இரண்டு தொழிலாளர்களும் மண் மற்றும் பெரும் பாறைகளுக்கு அடியில் புதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தம் குறித்துத் தகவல் கிடைத்ததும், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இராணுவத்தினரின் விசேட உதவியுடன், கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி மண் மற்றும் கற்களுக்கு அடியில் புதைந்துள்ள உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.