மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவர் கைது: 12 போத்தல் மதுபானம் மீட்பு
மட்டக்களப்பு - வவுணதீவில் பூரண தினத்தில் சட்டவிரோதமாக இரு வீடுகளில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவரை 12 போத்தல் மதுபானங்களுடன் கைது செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்துள்ளார்.
விசேட புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று(20) காலை நெடுஞ்சேனை பிரதேசத்தில் வெவ்வேறு இரு வீடுகளை பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 18 வயதுடைய இளைஞர் ஒருவரை 7 போத்தல் கொண்ட 5250 மில்லி லீற்றர் மதுபானத்துடனும், 43 வயது கொண்ட பெண் ஒருவரை 5 போத்தல் கொண்ட 3750 மில்லி லீற்றர் மதுபானத்துடன் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களை நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.