ஈரான்- இஸ்ரேல் போர் நிறுத்தம் நடைமுறையில்.. டொனால்ட் ட்ரம்பின் கடுமையான எச்சரிக்கை
போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது நடைமுறையில் உள்ளது. தயவுசெய்து அதை மீறாதீர்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூகவலைத்தளமான ட்ரூத் சோஷியலில் இன்றையதினம்(23) பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலும் ஈரானும் முழுமையான மற்றும் நிரந்தரமான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி நேற்றையதினம் அறிவித்திருந்தார்.
போர் நிறுத்தம்
இது தொடர்பில் சமூக ஊடக பதிவில் ட்ரம்ப் குறிப்பிடுகையில்,
“இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகியவை முழுமையான மற்றும் மொத்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டன. இந்தப் போர் நிறுத்தம் ஆறு மணி நேரத்திற்குள் தொடங்கி, 12 மணி நேரம் வரை நீடிக்கும்.
மேலும், ஈரான் முதலில் தனது போர் நிறுத்த நடவடிக்கையை தொடங்கி, 12 மணி நேரத்திற்குப் பின் இஸ்ரேல் போர் நிறுத்த இணக்கப்பாட்டுக்கு வருகைத்தரும்.
இதன் மூலம், 24 மணி நேரத்தில் 12 நாட்கள் இடம்பெற்ற இந்த மோதல் முடிவுக்கு வரும்” என பதிவிட்டிருந்தார்.
ஈரான் தாக்குதல்
இருப்பினும், இஸ்ரேல் மற்றும் ஈரான் இதுவரை இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தவில்லை.
மேலும் ஈரானிய அரசு ஊடகங்கள், நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தாலும், உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் இறுதி ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கின்றன.
எனினும், இன்று அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. அதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் ஈரானில் இருந்து பல மணி நேரம் ஏவுகணைகள் வீசப்பட்டதால் மூடப்பட்ட இஸ்ரேலின் வான்வெளி அவசர விமானங்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறான பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.