ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும்
பயணம் செய்ய இலக்கு வேண்டும். பறப்பதற்கு சிறகுகள் வேண்டும். கொடி உயரக் கொழுகொம்பு வேண்டும். படகு பிழை என்பதற்காக பயணம் தவறில்லை. படகு பிழை என்றால் படகைத் திருத்து. படகோட்டி பிழையென்றால் ஓட்டியை மாற்று. ஆனால் பயணத்தை மாற்றாதே.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான கடந்த ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலான தமிழ் அரசியற் தலைமைகளின் போக்கு , வீழ்ந்தவன் மேல் மாடு ஏறி மிதிப்பது போல் உள்ளது. தமிழ் கட்சிகளுக்குள்ளும் தமிழ் கட்சிகளுக்கு வெளியிலும் தமிழ் கட்சிகளுக்கு இடையேயும் உள்நாட்டுப் பரிமாணத்திலும், வெளிநாட்டுப் பரிமாணத்திலும் தமிழ் அரசியல் ஒரு புதிய பாதையை, புதிய வழிமுறையை, புதிய பரிமாணத்தைத் தேடவேண்டியுள்ளது.
இங்கு குறிப்பாக உள்நாட்டு வெளிநாட்டு பரிமாணத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய யதார்த்த பூர்வமான நிலைமைகளைச் சரிவர அடையாளம் கண்டு அதனை முன்னெடுக்குமாறு இக்கட்டுரை கூறி நிற்கின்றது. அதற்கான அறிவார்ந்த, நடைமுறைக்கு அவசியமான முன்மொழிவே இக்கட்டுரையாகும்.
விடுதலைப் போராட்டம்
காலனிய ஆதிக்கத்திற்கெதிரான தேசிய விடுதலைப் போராட்டங்கள் சந்தேகத்திற்கிடமின்றி உலகிலனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. சில வேளைகளில் தலைமை தாங்குவதில் தவறிருந்தால் விடுதலைக்கான காலம் பின்தள்ளப்படுமேயாயினும் விடுதலை அடைவது நிச்சயம்.
அரசற்றதேசிய இனங்கள் அரசமைப்பதற்கான விடுதலைப் போராட்டங்களனைத்தும் வெற்றி பெற்றன என்று சொல்வதற்கில்லை. அதில் பெருந்தோல்வியடைந்தவைகளும், விடுதலை சாத்தியமற்றவைகளுமுண்டு. உதாரணமாக திபெத்திய விடுதலைப் போராட்டம் ஒருபோதும் சுதந்திர அரசமைப்பதற்குச் சாத்தியமற்றது.
ஒருபுறம் திபெத் கடல் வழியின்றி மலைவாழ் நிலத் தொடரால் நிலப் பூட்டுண்ட நிலையில் (Land locked) அதனைச் சூழச்சிறிதும் சாதகமற்ற அயல்நாடுகள் காணப்படுவதோடு, அதன்மீது ஆதிக்கம் செலுத்தும் அதன் எஜமானிய நாடான சீனா உலகில் இரண்டாவது அணுவாயுத வல்லரசாகக் காணப்படும் நிலையில் உள்நாட்டு, வெளிநாட்டு அண்டைநாட்டு அரசியல் - இராணுவ நிலைமைகளேதுவும் அதற்குக் கைகொடுக்க முடியாது.
மேலும் அண்டை நாடான இந்தியா 1950களில் உதவ முற்பட்ட நிலையில் சீனாவுடனொரு பெரும் யுத்தத்தை எதிர்கொண்டு அதில் தோல்வியடைந்து தன் நிலப்பரப்பைக் கூட இந்தியா இழந்து இன்று வரை மீட்க முடியாத அளவுக்கு அதன் இறுக்கமான நிலையுள்ளது. மேற்குலகமும் தன் தார்மீக ஆதரவைத் தீபெத்துக்கு வழங்கினாலும் நாடு பிரியக்கூடிய அளவுக்கு அவை இராணுவ ரீதியில் ஆதரவளிக்க மாட்டா.
திபெத்தின் அமைவிடம், புவிசார் அரசியற் சூழல், அண்டை நாட்டுச்சூழல், மற்றும் சர்வதேச உறவுகள் போன்ற எதுவுமே திபெத் இறைமை கொண்ட தனியரசாவதற்கான வாய்ப்பையளிக்க மாட்டாது. அரசற்ற பல தேசிய இனங்கள் விடுதலை அடைவதற்கு ஏதுவாகவிருந்த காரணங்களையும், அவ்வாறே அரசற்ற பல தேசிய இனங்கள் விடுதலை அடைய முடியாதிருப்பதற்கான காரணங்களையும் பிறிதொரு கட்டுரையில் தனியாக ஆராயலாம். அதேவேளை விடுதலையடையக்கூடிய அரசற்ற இனங்களின் நடப்பு நிலையுமுண்டு.
இந்த வகையில் ஈழத்தமிழர் இறைமையுள்ள தனியரசாக விடுதலை அடையக்கூடிய அடிப்படை வாய்ப்பைக் கொண்டுள்ளனர். அது மந்திரக்கோல் கொண்டு செய்யக்கூடிய விடயமல்ல. சூழ்நிலைகளைக் கையாளக் கூடிய வல்லமையினால் உருவாக்கப்படக்கூடிய ஒரு யதார்த்த நிலைமையாகும். யதார்த்தம் வாய்ப்பாக இருந்தாலும் அந்த யதார்த்தத்தை விடுதலைக்கான நடைமுறையாக முன்னெடுக்க வல்ல தலைமைத்துவம் இன்றியமையாதது.
இத்தகைய பின்னணியில் ஈழத் தமிழர்களின் விடுதலை சார்ந்து காணப்படக்கூடிய உள்நாட்டு, அண்டை நாட்டு, சர்வதேச, உலகம் தழுவிய வகையிற் காணப்படும் யதார்த்தத்தை ஒரு தெளிவான கணிதவகைக் கணிப்பீட்டுக்குட்படுத்தி நடைமுறைச் சாத்தியமான கணிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வகையில் ஓர் அரசற்ற இனத்தின் நலனுக்காக ஒத்த பண்பாட்டு அடையாளத்தின் அடிப்படையிலோ அல்லது ஒத்த இன, மத,மொழி அடையாளத்தின் அடிப்படையிலோ இன்னொரு நாட்டில் வாழும் ஒத்த இன மக்கள் காட்டக்கூடிய அரசியல் அக்கறையும், ஒத்துழைப்பும் வெளிநாட்டு இனச் சகோதரத்துவ அரசியல் எனப்படும். கனடா வாழ் பிரான்ஸ் இன கியூபெக் மக்களுக்கு கனடிய ஆங்கில மேலாண்மை மத்திய அரசுடன் இனப்பிரச்சனை எழுந்த பொழுது பிரான்ஸ் அரசும், பிரான்ஸ் மக்களும், பிரான்ஸ் இன கியூபெக் மக்களுக்கு ஆதரவாகவும், அனுசரணையாகவும் செயல்பட்டனர்.
ஈழத்தமிழர்
குறிப்பாக 1967 ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி டி கோல் கியூபிக் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக மண்ரயலி பகிரங்கமாகப் பேசினார். (Charles de Gaulle famously uttered the phrase "Vive le Québec libre!" (Long live free Quebec!). அந்தப் பேச்சு கனடிய, அமெரிக்க, பிரித்தானிய, நேட்டோ அரசியலில் ஒரு நொதியத்தை (Catalyst) உருவாக்கியது.
கியூபெக் மக்கள் தாம் விரும்பிய ஒரு சமஸ்டி அரசியற் தீர்வை அடைய அது பெரிதும் வழி வகுத்தது. இதே போல பாலஸ்தீனிய மக்களுக்கு அரபுலக நாடுகளும், அரேபிய மக்களும், இஸ்லாமிய நாடுகளும், உலகெங்கும் பரந்து வாழும் இஸ்லாமிய மக்களும் ஆதரவாயும், அனுசரணையாகவும் செயற்படுகின்றனர். மேற்படி இவையிரண்டும் வெளி நாட்டு இனச் சகோதரத்துவ அரசியலுக்கு முக்கிய உதாரணங்களாகும். இப்படி உலகிற் பல இனச்சகோதரத்துவ உறவுகள் உள்ளன. ஈழத் தமிழர் தொடர்பான விடயத்தில் தமிழ்நாடு வாழ் தமிழ் மக்கள் இன, மத,மொழி, பண்பாட்டு அடிப்படையில் ஒத்த இனத்தவராவர்.
மதப்பண்பாட்டு அடிப்படையிலெடுத்துக் கொண்டால் ஈழத் தமிழருடன் இந்தியா ஒரு பொதுவான அல்லது மேம்போக்கான ஒத்த தன்மையைக் கொண்டுள்ளது. குறிப்பாக வகுத்துபார்க்கையில் அரைச் சமஸ்டி அரசான தமிழக அரசும், தமிழக மக்களுந்தான் உலகளாவிய நிலப்பரப்பில் ஈழத் தமிழ் மக்களுக்கென்று இருக்கக்கூடிய ஒரே ஒரு வெளிநாட்டு இனச்சகோதரத்துவ அரசியற் களமாகும்.
அந்தக்களம்தான் ஈழத் தமிழர்களுக்கான சர்வதேச அரசியற்களம். அதைத் தவிர வேறெந்த சர்வதேசத் தளமும் ஈழத்தமிழரின் இலக்கையடைய உதவாது. தமிழகத்துக்கு வெளியே உலகிலிருக்கக்கூடிய எந்தவொரு சர்வதேச அரசியற்களமும் ஈழத் தமிழருக்காக ஆங்காங்கே குரல் கொடுக்கக்கூடுமேயானாலும் யாராலும் ஈழத் தமிழர்களுக்கு வாழ்வளிக்க முடியாது. அரசியல் யதார்த்தத்தில் தமிழகத்தைத் தவிர உலகில்வேறு எந்தக்களமும் ஈழத்தமிழருக்குப் பெரியயளவில் உதவ முடியாது.
இதுதான் விஞ்ஞானபூர்வமான அரசியல் யதார்த்தம். இதனை உணரத்தவறினால் கற்பனையில் சிறகடித்து வானிற்பறக்கலாம்; யதார்த்தத்தில் தலைகுத்துண்டு முள்ளிவாய்க்கால் போன்ற புதை குழிகளுக்குள் புதையலாம். அரசியற்தத்துவத்தில் உண்மை - யதார்த்தம் - நடைமுறை - மேலான நடைமுறை என நான்கு அம்சங்கள் உண்டு (Truth -- Reality -- Practice Praxis). அதாவது "பசி" என்பது உண்மை, சோறு சமைக்க அரிசி போதாது.
ஆனால் அது கஞ்சி காய்ச்சப் போதும் என்பது யதார்த்தம். அதைக்கஞ்சி காய்ச்சினால் அது ஒரு சாதாரண நடைமுறை. ஆனால் கூடவே 2 கோழி முட்டையும், அரைப் போத்தல் ஜாமும் இருக்கும் நிலையில் அந்த அரிசியையும், முட்டையையும் சேர்த்து விற்றால் பாண்( Bread) வாங்கி ஜாமுடன் வயிறாறச் சாப்பிடலாம் என்று தாய் முடிவெடுக்கிறாள். தாயின் செயல் மேலான நடைமுறை (Praxis).
' உண்மை -யதார்த்தம் - நடைமுறை மேலான நடைமுறை " என்ற தத்துவநிலை காதல் - கல்யாணம் -- குடும்பம் --உறவு -பகை --சண்டை-- சச்சரவு - நாடு-- அரசு-- வழக்கு -- கணக்கு --யுத்தம் -உள்நாடு -- சர்வதேச ம் --அரசியல் --- பொருளாதாரம் ஆகிய அனைத்துக்கும் பொருந்தும். இது வாழ்வியலிலும், பரந்த அரசியலிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அடிப்படைத்தத்துவம்.
தமிழகம்
அரசற்ற தேசிய இனங்களின் அரசமைப்பதற்கான தேசிய விடுதலைப் போராட்டங்கள் எதுவும் தெளிவான, வெளிப்படையான, பொருத்தமான வெளிநாட்டு ஆதரவின்றி ஒரு போதும் விடுதலை சாத்தியமாகாது. இந்த வகையிற் பலம் வாய்ந்த பொருத்தமான வெளியாதரவின்றி அரசமைப்பதற்கான தேசிய விடுதலைப் போராட்டங்களெதுவும் கொழுகொம்பின்றி உயர முடியாத கொடியின் கதையாகவேயமையும். தமிழகம் இந்தியாவிற் பலம் வாய்ந்த மாநிலம்.
இந்து மகாகடலில் இந்தியாவின் அமைவிடத்தைப் பொறுத்தவரையில் இந்து மாகடலில் தமிழகம்தான் இந்தியாவின் வாயிலாக உள்ளது. கடல் சார்ப் புவியியல் அடிப்படையில் இந்தியாவுக்கான இருதய நிலைமாய்த் தமிழகமுள்ளது. கடல்சார் அடிப்படையிற் இந்தியாவின் எதிர்கால வாழ்வுக்கான அடித்தளம் தமிழகம் தான். கூடவே ஈழத்தமிழரின் நிலப்பரப்பு அதனோடு நீண்டு இந்தியாவுடன் பாக்கு நீர்இணை வழியாக தொடுபட்டிருக்கும் மக்களாய் ஈழத்தமிழருள்ளனர்.
ஈழத்தமிழரின் கடல்சார் முக்கியத்துவத்தை இந்தியாவால் எதிர்காலத்தில் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. கூடவே தமிழகத்தின் நலனும் ஈழத்தமிழர்கள் மீது பெரிதும் தங்கியுள்ளது. பின்னணியிற் பலம் பொருந்திய தமிழகத்தில் இந்திய மத்திய அரசை தனது செல்வாக்குக்கு எப்போதும் உட்படுத்த முடியும். விரும்பியோ, விரும்பாமலோ இந்திய மத்திய அரசுக்குத் தமிழகமும், ஈழத்தமிழரும் தவிர்க்க முடியாத பெரும் சக்திகளாவர்.
பாக்கு நீரிணைதான் சிங்களவருக்கு ஒரு நாட்டை கொடுத்ததும், சிங்கள பௌத்தத்துக்கான அருணாக அமைந்ததுமாகும். அதேவேளை அந்தப் பாக்கு நீரிணை வழியாக தமிழகத்துடன் இருக்கக்கூடிய உறவுதான் ஆயுதப் போராட்டத்திற்கான பின்புலமாகவும், அனைத்து ஆயுத இயக்கங்களின் தொட்டிலாகவும் அமைந்து ஆயுதப் போராட்டம் வளர அடிபோலியது.
ஆயுதப் போராட்டத் தலைவர்களனைவரும் இலங்கையரசால் கொல்லப்பட முடியாதளவிற்கு தமிழகம் அனைவருக்கும் சரணாலயமாகவிருந்தது. இனியுமதுதான் உண்மை. அதாவது தமிழகத்துடனான புவியியலமைவிடமும், பண்பாட்டுத் தொடர்ச்சியும் இதனை என்றும் வலுவாகப் பேணவல்லவை. தற்காலிக கோப - தாபங்களினால் இவை அழிந்து போக முடியாதவை.
ஒருபுறம் ஈழத்தமிழருக்கு எந்தவொரு வெளி அரசினதும் வெளிப்படையான ஆதரவு கிடைக்க முடியாத சர்வதேச அரசியற்சூழலிருக்கும் போது, அரசாகக் காணப்படும் இலங்கை அரசை மீறி எந்தவொரு அரசும் உறவு கொள்வதற்கான வாய்ப்பற்ற நிலையிலும் அசுர பலத்துடன் சிங்கள அரசு செயல்படும் நிலை ஈழத்தமிழ்த் தேசிய இனம் அழிந்து போகக்கூடியதாகக் காணப்படும் யதார்த்த நிலையில் தமிழகம் ஒன்று மட்டுந்தான் ஈழத்தமிழருக்கான ஊன்றுகோலாக விளங்க முடியுமென்பதால் அதனைத் தமிழகம் செய்ய வேண்டுமென்று தெளிவான அரசியற் தீர்மானங்களின் மூலம் ஈழத்தமிழர் அரசியலை ஈழத்தமிழ்ச் சக்திகள் முன்னெடுக்க வேண்டும்.
சுதந்திரத்தின் பின் முழு இந்திய அரசியலில் முன்னெப்பொழுதுமோ அல்லது பின்னெப்பொழுதுமோ வரலாறு கண்டிராத மாபெரும் முழு நாள் ஹர்த்தால், கதவடைப்புப் போராட்டம் ஈழத்தமிழரின் பெயரால் 1983 ஆம் ஆண்டு ஓக்கஸ்ட் 16 ஆம் திகதி தமிழகத்தில் முழு அளவிலான வெற்றியுடன் நிகழ்ந்தது. தமிழக சட்டசபையில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை தான் என்ற ஒருமனதான தீர்மானம் இதுவரை இரண்டு தடவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் 19 இளைஞர் - யுவதிகள் ஈழத்தமிழரின் பெயரால் தீக்குளித்து தம்மினிய உயிர்களை ஈய்ந்துள்ளார்கள்.
இவற்றையெல்லாம் கருத்திலெடுத்து ஈழத்தமிழர்கள் இந்தியாவில் கட்சி சார்பற்ற வகையிலான அரசியலை வீரியத்துடன் புது மெருகூட்டி முன்னெடுக்க வேண்டும். இந்த இன சகோதரத்துவ அரசியலைத் தவிர சர்வதேச அரங்கில் ஈழத்தமிழருக்கு வேறெந்தப் பலமான தளமும் கிடையாது. அப்படி கண்மூடித் தனமாக யாரும் சொல்வார்களேயானால் இறுதியில் அவர்கள் மிகக் குறும் காலத்தில் தமது இரண்டு கரங்களையும் உயர்த்திக்கொண்டு இனப்படுகொலையாளர்களின் கால்களில் வீழ்ந்து மடிவதைத் தவிர வேறெதுவும் மிஞ்சாது. இது விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு, சர்வதேச அரசியல் யதார்த்தக் கணிப்பீடாகும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 22 June, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 3 மணி நேரம் முன்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
