மீண்டும் அதிரடி காட்டிய ட்ரம்ப் : 10லிருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ள இறக்குமதி வரி..
அமெரிக்க உயர் நீதிமன்றம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த உலகளாவிய இறக்குமதி வரிகளை (Tariffs) இரத்துசெய்து உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக வெள்ளிக்கிழமை(20) அன்று 10 சதவீத வரியை விதிப்பதாக அறிவித்திருந்தார்.
ஆனால், இன்று தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்துவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சி : உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிரடியாக ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி
15 சதவீத வரி விதிப்பு
இந்த புதிய 15 சதவீத வரி விதிப்பானது வரும் பெப்ரவரி 24-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பிரிவு 122' (Section 122) என்ற சட்டத்தின் கீழ் இந்த வரிகள் விதிக்கப்படுவதால், இவை சுமார் ஐந்து மாதங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்க முடியும்.
அதற்கு மேல் இந்த வரிகளைத் தொடர வேண்டுமானால், ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress) ஒப்புதலைப் பெற வேண்டியது கட்டாயமாகும்.
கடந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் பல நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதித்திருந்தது.
இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், 6-3 என்ற கணக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், வரி விதிக்கும் அதிகாரம் காங்கிரஸுக்கே (நாடாளுமன்றம்) உள்ளது என்றும், ஜனாதிபதி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் கூறி அந்த வரிகளைச் செல்லாது என அறிவித்தது.
பெரும் பின்னடைவு
இந்தத் தீர்ப்பினால் பெரும் பின்னடைவைச் சந்தித்த ட்ரம்ப், தன்னை எதிர்த்துத் தீர்ப்பளித்த நீதிபதிகளை "முட்டாள்கள்" என்றும் "தேசப்பற்றற்றவர்கள்" என்றும் கடுமையாகச் சாடினார்.
குறிப்பாக, தான் நியமித்த எமி கோனி பாரெட் மற்றும் நீல் கோர்சுச் ஆகிய நீதிபதிகள் தனக்கு எதிராக வாக்களித்தது குறித்து அவர் மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான டொலர்களைத் திரும்ப வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவது எளிதாக இருக்காது என்றும், இதற்காகப் பல ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பதிலடி
நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, 'பிரிவு 122' (Section 122) என்ற இதுவரை பயன்படுத்தப்படாத ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி, வரும் பெப்ரவரி 24 முதல் புதிய 10 சதவீத உலகளாவிய வரியை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தச் சட்டத்தின் கீழ் 150 நாட்களுக்கு வரி விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது, அதன் பிறகு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும்.
இந்த வரி விதிப்பில் இருந்து மருந்துகள், சில மின்னணு பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை உலக வர்த்தகச் சூழலில் மீண்டும் ஒரு நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது.
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri