13 சட்டவிரோதமான சட்டம் இல்லை; பிக்குகள் புரிந்து கொள்ள வேண்டும்! ஐக்கிய மக்கள் சக்தி
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் என்பது சட்டவிரோதமான சட்டம் அல்ல, இதை பௌத்த பிக்குகள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஜே.ஆர்.ஜயவர்தனவும் ராஜீவ் காந்தியும் இணைந்து உருவாக்கியதுதான் இந்த 13ஆவது திருத்தச் சட்டமும், அதன் அடிப்படையிலான மாகாணசபை முறைமையும்.
இதில் பிரச்சினை என்னவென்றால் காணி - பொலிஸ் அதிகாரம்தான். இது சம்பந்தமாகப் பெரும்பான்மையான மக்கள் சந்தேகத்துடன் பார்ப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு காரணம்.
13ஆவது திருத்தம்
காணி - பொலிஸ் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டால் இப்படி இப்படியான ஆபத்துக்கள் ஏற்படும் என்று தெற்கு மக்களுடன் சேர்ந்து பௌத்த பிக்குகளும் நினைக்கின்றனர்.
எனவே, நாடு பொருளாதார பிரச்சினையை எதிர்கொண்டிருக்கும் நிலையில் இந்த 13ஆவது திருத்தம் பற்றிப் பேச வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது.
மக்கள் மூன்று வேளையும் உண்ண முடியாத நிலையில் உள்ளனர். இதனால் 13 பற்றிப் பின்னர் பேசலாம் என்பதே எமது நிலைப்பாடு.
அதற்கு முன் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குமுன்னுரிமை கொடுக்கப்பட
வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
