அட்டமஸ்தானாதிபதி கைது விவகாரம் : 15 வயது சிறுமியைத் தவறாகச் சித்தரித்த அமுனுகமவுக்குக் கடும் கண்டனம்
அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி தேரரின் கைது மற்றும் தடுப்புக்காவல் உத்தரவு குறித்து ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட 'சர்வஜன பலய' கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகம, சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.
கட்சிக்குக் கிடைத்த தகவல்களின்படி, பாலியல் தொழிலாளி ஒருவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று திலும் அமுனுகம அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
மோசமான வார்த்தைப் பிரயோகம்
"எமக்குக் கிடைத்த தகவல்களின்படி, அட்டமஸ்தானாதிபதி தேரர் ஒரு பாலியல் தொழிலாளியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே கைது செய்யப்பட்டுள்ளார்" என்று அவர் அங்கு தெரிவித்திருந்தார்.

திலும் அமுனுகமவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சமூக வலைத்தளப் பயனாளர்கள் அவரது கருத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர் 15 வயதுடைய ஒரு சிறுமி என்பது ஊடக அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் பயன்படுத்திய மோசமான வார்த்தைப் பிரயோகம் குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
15 வயதுடைய ஒரு சிறுமியை எவ்வாறு இத்தகைய பதங்களைப் பயன்படுத்தி பகிரங்கமாகச் சித்தரிக்க முடியும் என்று சமூக வலைத்தளப் பயனாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட தீவிரமான குற்றச்சாட்டுகள் நிலவும் விவகாரங்களில், பொதுப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அதிக பொறுப்புணர்வுடனும், உணர்திறனுடனும் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
ஒரு சிறுமியை இவ்வாறான பொருத்தமற்ற மற்றும் அவமதிக்கும் வகையில் திலும் அமுனுகம சித்தரித்துள்ளமையானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சமூக வலைத்தளங்களில் சிவில் அமைப்பினரும் பொதுமக்களும் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வருகின்றனர்.