பொருளாதார நெருக்கடியால் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: பொலிஸாரின் அறிவிப்பு(Photo)
வீடொன்றில் இருந்த பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி வீடொன்றில் கடந்த 08 ஆம் திகதி உபகரணங்கள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை 24 மணிநேரத்திற்குள் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருட்டு சம்பவம்
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வீட்டின் உரிமையாளர் தனிப்பட்ட தேவை நிமித்தம் கொழும்பிற்கு சென்றிருந்த நிலையில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் நேற்று(15) புதன்கிழமை சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
உரிமையாளர் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸாருடன் பொதுமக்கள் இணைந்து மேற்குறித்த சந்தேக நபர்கள் களவாடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பதில் பொறுப்பதிகாரியின் தலைமையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் இன்று(16) சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதான சந்தேக நபர்களில் 28 வயதானவர் பிரதான சந்தேக நபர் எனவும் ஏனைய இரு சந்தேக நபர்கள் களவாடப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கைதான மூன்று சந்தேக நபர்களையும் இன்றைய தினம்(16) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் அறிவிப்பு
அத்துடன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் பல அதிகரித்துள்ளது.
எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அவ்வாறு திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பின் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.



