உயிரைப் பணயம் வைத்து தகவல் வழங்குநரை பாதுகாக்கின்றார் சுரேஷ் சலே - உதய கம்மன்பில வெளியிட்ட தகவல்
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே, நாட்டின் மிகச் சிறந்த மற்றும் தனித்துவமான ஒரு புலனாய்வு அதிகாரி என்பதைத் தனது அர்ப்பணிப்பான செயல்களின் மூலம் நிரூபித்துள்ளார் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மொரட்டுவை பகுதியில் நேற்று(22.06.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் சலே சிறந்த புலனாய்வு அதிகாரி
உலகப் புகழ்பெற்ற நிபுணர்கள் சுரேஷ் சலேயை ஒரு சிறந்த புலனாய்வு அதிகாரி என்று பாராட்டினாலும், தற்போதைய அரசு அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகச் சுட்டிக்காட்டிய கம்மன்பில தனக்குத் தெரிந்த தகவல் வழங்குநர்கள் பற்றிய விவரங்களைத் தனது சொந்த உயிரைப் பணயம் வைத்தாவது பாதுகாப்பதன் மூலம், தான் ஓர் உன்னதமான இராணுவ வீரன் என்பதை அவர் நிரூபித்து வருகின்றார் என்றும் கூறியுள்ளார்.

சுரேஷ் சலே ஓய்வுபெறும்போது அவரிடமிருந்த அனைத்து புலனாய்வுத் தகவல்களையும், தகவல் வழங்குநர்களின் விவரங்களையும் அரசிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என ஆளும் கட்சியிலுள்ள சில அரசியல்வாதிகள் கூறுவது அவர்களின் அறியாமையையே காட்டுகின்றது என்று சாடிய கம்மன்பில, 38 ஆண்டுகள் சேவையாற்றிய ஒரு மூத்த புலனாய்வு அதிகாரி என்ற ரீதியில் அவர் ஒரு வலுவான தகவல் வழங்குநர்களின் வலையமைப்பை உருவாக்கியுள்ளார் என்றும் விளக்கியுள்ளார்.
மேலும், தகவல் வழங்குநர்கள் அனைவரும் அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல்களை வழங்குவதில்லை என்றும், அவர்கள் தாங்கள் முழுமையாக நம்பும் தனிப்பட்ட அதிகாரியிடம் மட்டுமே இரகசியங்களைப் பகிர்ந்துகொள்வார்கள் என்றும் குறிப்பிட்ட அவர், அத்தகைய தகவல்கள் குறியீட்டு முறைகள் ஊடாகவே அரசின் உயர் மட்டத்துக்கு அனுப்பப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
மில்லேனியம் சிட்டி காட்டிக்கொடுப்பு
புலனாய்வுத் தகவல் வழங்குநர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் பற்றிய விவரங்களை அரசிடம் அத்துமீறி வழங்குவது என்பது, நாட்டின் பாதுகாப்பு வரலாற்றில் இரண்டாவது "மில்லேனியம் சிட்டி" காட்டிக்கொடுப்பதாகவே அமையும் என்றும் கம்மன்பில இங்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2002 மற்றும் 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற மில்லேனியம் சிட்டி காட்டிக்கொடுப்பின் போது, இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் தகவல் வழங்குநர்கள் பற்றிய விவரங்கள் பொலிஸாருக்குக் கசிந்தமையால் சுமார் 73 தகவல் வழங்குநர்களும் யுத்தவீரர்களும் படுகொலை செய்யப்பட்டுத் தங்களின் உயிர்களை இழக்க நேரிட்டதை அவர் இதன்போது நினைவு கூர்ந்தார்.
மேலும், இத்தகையதொரு துரதிர்ஷ்டவசமான மற்றும் ஆபத்தான நிலைமை இந்த நாட்டில் மீண்டும் ஒருபோதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, சுரேஷ் சலே தனது உயிரைப் பணையம் வைத்து தன்னிடம் உள்ள விவரங்களைப் பாதுகாத்து வருகின்றார் என்றும், அவரது இந்தத் தேசப்பற்றுமிக்க சேவைக்கு நாம் தலை வணங்கி மரியாதை செலுத்துகின்றோம் என்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam