உலகம் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது! - டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை
உலகம் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், கோவிட் தொற்றின் டெல்டா திரிபு தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகின்றது. டெல்டா வகையை தொடர்ந்து தற்போது டெல்டா பிளஸ் வகை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றி அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு சுமார் 100 நாடுகளில் பரவியிருப்பதால், தொற்றுநோயின் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் உலகம் உள்ளது என எச்சரித்துள்ளார்.
இந்த ஆபத்திற்கு எந்த ஒரு நாடும் விதிவிலக்கு அல்ல, டெல்டா வகை கோவிட் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அதே சமயம் தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை உலக நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 10 சதவீத மக்களாவது தடுப்பூசி செலுத்தியிருப்பதை உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.