“விடுதலைப் புலிகளின் தலைவரை போன்று செயற்படுகின்றனர்”! உடனடி தடை தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
இலங்கையில் உடனடியாக கொண்டு வரப்பட வேண்டிய தடை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் (13.10.2022) சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுப் போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பது உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். நாட்டின் சட்டங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முயல்கின்றன.

பழிவாங்கும் நோக்கில் செயற்படும் பெற்றோர்
என்ற போதும், போரின் போது மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ததைப் போல பெற்றோர்கள் பழிவாங்கும் நோக்கில் குழந்தைகளை போராட்டங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
குழந்தைகள் போராட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டால், இதுபோன்ற செயல்களைத் தடுக்க பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களும் தங்கள் போராட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்து வரக்கூடும்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல், மன, தார்மீக, மத மற்றும் சமூக மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அவர்களின் நலன்களை அரசாங்கம் விசேட கவனத்துடன் ஊக்குவிக்கும்.

பிரச்சினை தொடர்பில் அறிவுறுத்தல்
இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும், இல்லை என்றால் அது பிரச்சினையை ஏற்படுத்தும்.
மேலும், இலங்கையில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் பொதுப் போராட்டங்களில் சிறுவர்களை தடை செய்வதுடன் கடுமையான சட்டங்களும் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யார் பிழை..!
இலங்கையில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதிலும் குறிப்பாக அண்மையில் காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் குழந்தைகள் கேடயங்களாக பயன்படுத்தப்பட்டதாக ஒரு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைக்கும் அதேவேளை, மற்றொரு புறம் குழந்தைகளிடம் பொலிஸார் மிக மோசமாக நடந்து கொண்டதாக மற்றொரு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
காலிமுகத்திடலில் பதிவாகிய பதற்ற நிலைமையின் போது பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை எனவும், எவ்விதமான நோய் அறிகுறிகளும் இல்லாத காரணத்தினால் வைத்தியசாலையில் இருந்து குழந்தையை வீடு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
என்ற போதும் கூட பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும், இவ்வாறு ஆபத்தான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்திருந்தார்.

இரு தரப்பு தொடர்பிலும் விசாரணை
இவ்வாறான நிலையில் பிள்ளைகளை பெற்றோர் மனித கேடயங்களாக பயன்படுத்தினார்களா என்பது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
அதேவேளை பொலிஸார், சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனரா என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
எனினும் பெற்றோர், வேண்டுமென்றே பிள்ளைகளை ஆபத்தில் ஆழ்த்தினார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
சிலர் சிறுவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியுள்ளதாக தென்படுகின்றது எனவும், இது சர்வதேச சட்டங்களை மீறும் வகையிலானது எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே சிறுவர்கள் போராட்டங்கள் இடம்பெறும் இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதை தடை செய்ய வேண்டும் என கடுமையாக வலியுறுத்தியுள்ளார் ஜனாதிபதி.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து நமக்கு போராட்டங்கள் என்றாலே ஏதோவொரு அச்சம் கலந்த மன நிலைமையே உணர முடிகிறது. இவ்வாறானதொரு சூழலில் ஆபத்தான இடம் என தெரிந்தே பிள்ளைகளை போராட்டங்கள் இடம்பெறும் இடங்களுக்கு கொண்டு செல்வதும் அவர்கள் பாதிக்கப்படுவதற்கு தெரிந்தே காரணமாவதையும் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.