குழந்தைக்கு பியர் பருகச் செய்தவர்! நீதிமன்றத்தின் தீர்ப்பு
குழந்தையொன்று பியர் அருந்தும் காட்சிகள் இலங்கையில் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு இலட்சம் ரூபா தனிப்பட்ட பிணையில் அவரை விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
பேலியகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் கொழும்பு பிரான நீதவான் புத்திக சி ராகல முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த சந்தேகநபர் 4 வயது குழந்தைக்கு பியர் மதுபானத்தை அருந்தக் கொடுத்து அதனை காணொளி பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
குழந்தையை கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்து குழந்தையின் மனநிலை குறித்து அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ள நீதவான் உத்தரவிட்டார்.
குழந்தையொன்று பியர் குடிக்கும் காட்சியொன்று சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயது குழந்தையின் தந்தை நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
குழந்தை பியர் குடிக்கும் காட்சிகள் குறித்து விசாரணையை ஆரம்பித்த பேலியகொட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்திருந்தனர்.
இந்த சம்பவம் பேலியகொட நுகே வீதியில் இடம்பெற்றிருந்தது. "நாட்டில் தற்போதுள்ள சட்ட விதிகளின்படி, ஒரு நபர் 18 வயதுக்குக் குறைவான ஒருவருக்கு மதுபானம் அல்லது பொருள் அல்லது புகையிலை பொருட்களை வழங்குவது கண்டறியப்பட்டால், அது குற்றமாகும்" என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.