வெகுவிரைவில் மாற்றமடையவுள்ள இலங்கையின் பெயர் - தேரர் தகவல்
முறையற்ற செயற்பாடுகளினால் இலங்கையின் பெயர் வெகுவிரைவில், “உலகின் குப்பைகள் களஞ்சியப்படுத்தும் நாடு” என மாற்றமடையும் என ஓமல்பே சோபித தேரர் (Omalpe Sobitha Thero) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சீனாவின் குவின்ங்டாவோ நிறுவனம், மற்றும் அதன் உள்நாட்டு முகவர் நிறுவனத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டுவரப்படும் உயிரிய சேதன பசளைக்கு நிதி செலுத்த வேண்டாம் என கொழும்பு வணிக மேல்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை உர நிறுவனம் மற்றும் சுற்றுசூழல் ஆய்வாளர்கள் தாக்கல் செய்த மனுவிற்கு அமைய வணிக மேல் நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
இலங்கையின் காலநிலைக்கும், மண்வளத்திற்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் சீன நாட்டிலிருந்து வரும் கப்பலில் உள்ள சேதன பசளையில் அடங்கியுள்ளது.
ஆகவே அந்த உரத்தை நாட்டுக்குள் கொண்டு வர வேண்டாம் என விவசாயத்துறை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இலங்கை உரக்கூட்டுத்தாபனம் தாக்கல் செய்த மனுவிற்கு அமைய கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவிற்கு அமைய அந்நிறுவன உரத்திற்கு நிதி வழங்குவது இடைநிறுத்தப்படும்.
ஆனால் எமக்கு பணம் வேண்டாம், இலவசமாக உர தொகையை அன்பளிப்பு செய்கிறோம் என அந்த நிறுவனம் குறிப்பிடுமா என்று தெரியவில்லை.
அந்த உர தொகையை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு வணிக மேல் நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. நிதி வழங்குவதற்கு மாத்திரம் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கொண்டு வரப்படும் உரம் அன்பளிப்பாக நாட்டுக்கு வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளினால் இலங்கை பெயர் வெகுவிரைவில் உலகின் குப்பைகள் களஞ்சியப்படுத்தும் நாடு என மாற்றமடையும்.
சீனாவில் இருந்து வரும் இந்த பாதிப்பை ஏற்படுத்தும் குப்பை அன்பளிப்பாக பெற்றுக்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கவும் வாய்ப்புண்டு.
அரச தலைவர்களினதும், அரசாங்கத்தினதும் தவறான தீர்மானங்கள் முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்கும்.
இவ்வாறான செயற்பாடுகள் இலங்கை மக்கள் வாழ்வதற்கு உகந்த நாடல்ல என்ற பெயரை பெறும் அவல நிலைக்கு தள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.