ஜோர்ஜ் ப்ளொய்டை கொலை விவகாரம்! நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது
அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொய்டை (George Floyd) என்பவரை கொலை செய்த பொலிஸ் அதிகாரிக்கு 22 ஆண்டுகளும் 6 மாதங்களும் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றது. டெரெக் சுவாவின் என்ற பொலிஸ் அதிகாரி, மினியாபொலிஸ் நகர வீதியில் வைத்து, ஜோர்ஜ் ப்ளொய்டின் கழுத்தில், 9 நிமிடங்கள் முழந்தாளிட்டு அழுத்தியமையால் அவர் மரணித்தார்.
இதன்போது, ப்ளொயிட் கூறிய I Cant Breath என்ற வார்த்தைகள் உலகளாவிய ரீதியில் பாரிய போராட்டத்திற்கு வித்திட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து, நிறவெறிக்கு எதிராகவும், பொலிஸாரின் செயற்பாட்டுக்கு எதிராகவும் சர்வதேச ரீதியில் பெரும் எதிர்ப்புகள் வெளியாகின.
இந்நிலையில், கடந்த மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, டெரெக் சுவாவின் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். இதையடுத்து அவருக்கான தண்டனை நேற்று முன்தினம் (25) அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை மற்றும் அதிகாரம் கொண்ட கடமையை துஷ்பிரயோகம் செய்தமை, ப்ளொய்டுக்கு இழைத்த கொடுமை ஆகிய காரணங்களால் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 45 வயதான Derek Chauvin-க்கு 22 ஆண்டுகளும் 6 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை ப்ளொய்ட்டின் குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.
இது பொருத்தமான தண்டனையாக தெரிவதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், எவ்வாறாயினும் குறித்த சம்பவம் தொடர்பிலான அனைத்து விடயங்களும் தனக்கு தெரியாது என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்குமாறு ஜோர்ஜ் ப்ளொய்டின் சகோதரர் மன்றில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri