எதிரணியினரின் பேரணிகளுக்கு அரசு ஒருபோதும் அஞ்சமாட்டாது! என்பிபி அமைச்சர் திட்டவட்டம்
எதிர்க்கட்சியினர் கொழும்பில் பேரணிகளை நடத்தினாலும் அல்லது கூட்டணிகளை அமைத்தாலும் அரசு எதற்கும் அஞ்சப்போவதில்லை எனவும், நாட்டின் அனைத்து அரசியல் நகர்வுகளுக்குமான இறுதித் தீர்ப்பை மக்கள் மட்டுமே வழங்குவார்கள் எனவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
பதுளை - ஹெலிஎல பிரதேசத்தில் இன்று(17) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியினரின் நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசு கிராமம் கிராமமாக மக்கள் சந்திப்புகளை நடத்துவது எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளுக்குப் பயந்து அல்ல. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே இந்தக் கூட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் சூழ்நிலைகள் காரணமாகவே அவை தாமதமாகின.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு அமைய, அபிவிருத்திப் பணிகளும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
மோசடிகள் அம்பலம்
கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் அம்பலமாகி வரும் நிலையில், முந்தைய ஆட்சியாளர்களே மக்களிடம் பழிவாங்கியுள்ளனர் என்பது தெளிவாகின்றது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
நீதித்துறையின் செயற்பாடுகளில் அரசு எந்தவித தலையீடும் செய்யவில்லை. விசாரணைகளை முறையான மற்றும் விரைவான வழியில் நடத்துவதற்குத் தேவையான வசதிகளை மட்டுமே செய்து கொடுத்துள்ளது.

குற்றப் புலனாய்வு விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் விரைவுபடுத்தப்படும்போது, சிதைந்துபோன எதிர்க்கட்சிக் குழுக்கள் அச்சம் காரணமாக ஒன்றிணைய முற்படுவது இயல்பான ஒரு விடயமே தவிர, அதில் அச்சப்படுவதற்கு எதுவுமில்லை.
குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்களோ அல்லது எதிர்க்கட்சியினரோ என்ற பாகுபாடின்றி சட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.